மரக்காணம் அருகே அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 15 பேர் காயம்


மரக்காணம் அருகே அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 15 பேர் காயம்
x

மரக்காணம் அருகே அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. பேருந்தில் நாகப்பட்டினம், காரைக்கால், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 27 பயணிகள் இருந்துள்ளனர்.

பேருந்து வழக்கம் போல் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வந்துகொண்டிருந்த நிலையில், மரக்காணம் அடுத்த தாழங்காடு என்ற பகுதியில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த நிலையில், பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து பேருந்தில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து தொடர்பாக மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்த பயணிகள் மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story