பண்ருட்டி நகராட்சி வளாகத்தில் ரூ.2¾ கோடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்


பண்ருட்டி நகராட்சி வளாகத்தில்    ரூ.2¾ கோடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்    அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 6 Oct 2022 6:45 PM GMT (Updated: 6 Oct 2022 6:45 PM GMT)

பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் ரூ.2¾ கோடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

கடலூர்

பண்ருட்டி,


அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

பண்ருட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.2 கோடியே 80 லட்சம் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் பண்ருட்டி தி.வேல்முருகன், காட்டுமன்னார் கோவில் சிந்தனைச்செல்வன், நகரசபை ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரசபை தலைவர் கே.ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார்.

மேம்படுத்த வேண்டும்

சிறப்பு அழைப்பாளராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் குத்துவிளக்கு ஏற்றினார்.

விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியை 100 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாக மேம்படுத்த வேண்டும் என வேல்முருகன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிதியாண்டில் ஆஸ்பத்திரியை மேம்படுத்த முடியாவிட்டாலும் என்.எல்.சி. போன்ற பெரிய நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தில் நிதியை பெற்று மேம்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

விழாவில் கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ரமேஷ்பாபு, துணை இயக்குனர் மீரா, கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் வெற்றிவேல், நகரசபை துணைத் தலைவர் சிவா, மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர்கள் தணிகைச் செல்வம், ஆனந்தி சரவணன், அவைத்தலைவர் ராஜா, பொருளாளர் ராமலிங்கம், இளைஞரணி செயலாளர் சம்பத், எக்ஸ்னோரா பசுபதி உள்பட நகரசபை கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story