சினிமா இயக்குனர் கொலை வழக்கில் அரசு பள்ளி ஆசிரியை கைது


சினிமா இயக்குனர் கொலை வழக்கில் அரசு பள்ளி ஆசிரியை கைது
x

சினிமா இயக்குனர் கொலை வழக்கில் அரசு பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

சினிமா இயக்குனர் கொலை

பெரம்பலூர் புறநகர் அரணாரையை சேர்ந்தவர் செல்வராஜ் என்ற அப்துல்ரகுமான் (வயது 39). சினிமா இயக்குனர். மேலும் பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி இவர் பெரம்பலூர் பாலக்கரை அருகே ஒரு நட்சத்திர ஓட்டலில் உள்ள பாரில் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது பாருக்குள் புகுந்த ஒரு கும்பல், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொன்றது.

இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், அம்மாபாளையத்தை சேர்ந்த அழகிரிக்கும், செல்வராஜுக்கும் ஏற்பட்ட தொழில் போட்டியில், தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ள அழகிரி தனது மனைவி சங்கீதா மூலம் திட்டம் தீட்டி செல்வராஜை படுகொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

ஆசிரியை கைது

இதைத்தொடர்ந்து இந்த கொலை வழக்கில் சங்கீதா, அழகிரியின் தங்கையான திருச்சியை சேர்ந்த ரமணி, அவரது கணவர் பிரேம்ஆனந்த், பா.ஜ.க. பிரமுகர் ஜெயபாலாஜி உள்பட 17 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் சரவணன் உள்பட 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக ஜெயபாலாஜியின் மனைவியும், வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியையுமான சுலோச்சனாவை (41) நேற்று பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். கைதான சுலோச்சனா நேற்று பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பெரம்பலூர் போலீசார் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


Next Story