"அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை" - சபாநாயகர் அப்பாவு


அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை -  சபாநாயகர்  அப்பாவு
x

“அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்பதை அவர் 4½ மணி நேரத்தில் தெரிந்து கொண்டுள்ளார்” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

திருநெல்வேலி

சபாநாயகர் அப்பாவு நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பதவி நீக்கம் செய்யும் அதிகாரம்

பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தேச துரோக வழக்காக பார்க்கப்பட்ட நிலையில், அந்த வழக்கில் தொடர்புடைய முரளி மனோகர் ஜோஷி, அத்வானி போன்றவர்கள் மந்திரி பதவியுடன்தான் நீதிமன்றத்திற்கு சென்றனர். அந்த வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலிலும் வைக்கப்பட்டார்கள். அவர்கள் இருவரும் பதவியில் இருந்து கொண்டுதான் இந்த வழக்கை சந்தித்தனர்.

அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் உரிமை கவர்னருக்கு இல்லை. அரசியலமைப்பு சட்டத்தில் அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்பதை கவர்னர் 4½ மணி நேரத்தில் தெரிந்து கொண்டுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு

கவர்னருக்கு இருக்கும் உரிமைகள் என்ன? என்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தெளிவுபடுத்தி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவரை பதவி பிரமாணம் எடுத்து கொள்ளுங்கள் என சொல்லும் உரிமை மட்டும்தான் கவர்னருக்கு உள்ளது.

யார்-யார் அமைச்சர்களாக பதவியேற்பார்கள்? என்ற பட்டியலை கவர்னருக்கு கொடுத்தால், அதனை ஏற்று அவர் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

சபாநாயகருக்கு மட்டும்...

அமைச்சர்கள் தானாக பதவி விலகலாம். அல்லது அவர்களை பதவியை விட்டு முதல்-அமைச்சர் நீக்கலாம். அமைச்சர்களை கவர்னர் பதவி நீக்கம் செய்ய முடியாது. மேலும் வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது. அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு, அவர்களுக்கு தண்டனை 2 ஆண்டுகளுக்கு மேல் உறுதி செய்யப்பட்டால், பதவியில் இருந்து விலக நேரிடும்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோது தண்டனை கிடைத்ததால் தானாகவே பதவியில் இருந்து விலகினார். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு மட்டும்தான் உண்டு.

ராகுல்காந்தி 2 ஆண்டுகள் தண்டனை பெற்ற நிலையில், அவரது எம்.பி. பதவியை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாதான் பதவி நீக்கம் செய்தார். இதுபோன்ற பல உதாரணங்கள் உள்ளன.

உணர்ச்சிவசத்தின் வெளிப்பாடு

கவர்னரை பலமுறை நேரில் சந்தித்து பேசி உள்ளேன். அவர் மிகவும் நல்லவர். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர். இந்த நடவடிக்கை கூட உணர்ச்சிவசத்தின் வெளிப்பாடுதான். சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது உணர்ச்சி வசப்பட்டுதான் தேசிய கீதத்திற்குகூட நிற்காமல் வெளியேறினார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சிதான் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவி பிரமாணம் எடுத்து கொண்டு மதச்சார்பற்ற நாடான இந்தியாவை மதச்சார்புள்ள நாடு என்று கவர்னர் பேசுகிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி கவர்னரின் இந்த பேச்சு மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றம். இதனை தெரிந்து பேசுகிறாரா?, தெரியாமல் பேசுகிறாரா? என்பது தெரியவில்லை. இந்த போக்கை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும்.

தன்னிச்சையாக...

பாத்திமாபீவி கவர்னராக இருந்தபோது சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவே தகுதி இல்லாத நபரை முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விவகாரம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பதற்காக, அப்போதைய பிரதமர் மத்திய மந்திரி சபை ஒப்புதலோடு கவர்னரை திரும்ப பெறச் செய்தார். இதனை அறிந்த கவர்னர், பதவி விலகி கொண்டார். இதில் இருந்து அமைச்சரவை பரிந்துரையின்படி பணியாற்ற வேண்டிய கட்டாயமும், கடமையும் கவர்னருக்கு இருப்பது தெரிகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் சில அதிகாரங்களை கவர்னருக்கு வழங்கி உள்ளது. அதனை பின்பற்றி செயல்பட்டால் நன்றாக இருக்கும். அதுவே அந்த பதவிக்கு மாண்பை தரும். கவர்னர் தன்னிச்சையாக செயல்படுகிறாரா? என்பது தெரியவில்லை. டெல்லி சென்று வந்தார் என்பது மட்டுமே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story