2 நாள் பயணமாக இன்று திருவண்ணாமலை செல்கிறார் கவர்னர் ஆர்.என.ரவி..!


2 நாள் பயணமாக இன்று திருவண்ணாமலை செல்கிறார் கவர்னர் ஆர்.என.ரவி..!
x
தினத்தந்தி 10 Aug 2023 3:15 AM GMT (Updated: 10 Aug 2023 5:04 AM GMT)

கவர்னர் ஆர்.என.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று திருவண்ணாாமலைக்கு செல்கிறார்.

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (வியாழக்கிழமை) மதியம் 12.45 மணிக்கு திருவண்ணாமலைக்கு செல்கிறார். பின்னர் கிரிவலப்பாதையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதுக்கள் மற்றும் சிவனடியார்களை சந்தித்து பேசி அன்னதானம் வழங்கும் அவர் மாலை 4 மணிக்கு இயற்கை விவசாயிகளை சந்தித்து பேசுகிறார்.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு ரமணாஸ்ரமத்துக்கும், மாலை 6 மணிக்கு யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்துக்கும் செல்கிறார். இரவு 9 மணியளவில் கிரிவல பாதையில் சிறிது தூரம் நடந்து செல்கிறார். பின்னர் இரவு அரசு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.

தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதன்பின் திருவண்ணாமலை தென்மாத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் அங்கிருந்து காலை 9.20 மணிக்கு ஜவ்வாதுமலைக்கு புறப்படுகிறார். ஜமுனாமரத்தூரில் உள்ள சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தபின் குனிகாந்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் பள்ளியில் மாணவ-மாணவிகள், பெற்றோர்களை சந்தித்து பேசுகிறார்.

பின்னர் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் சாலையில் உள்ள காவலூர் விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் அவர் மதியம் 1 மணிக்கு மீண்டும் சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார். பின்னர் மாலை 5 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சென்று அங்குள்ள கோட்டைக்கு செல்கிறார்.

இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை திரும்புகிறார். கவர்னர் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story