கவர்னர் மாளிகைகளை ஆஸ்பத்திரிகளாக பயன்படுத்தலாம் -வைகோ பேட்டி


கவர்னர் மாளிகைகளை ஆஸ்பத்திரிகளாக பயன்படுத்தலாம் -வைகோ பேட்டி
x

கவர்னர் மாளிகைகளை ஏழை மக்களுக்கான ஆஸ்பத்திரிகளாக பயன்படுத்தலாம் என மதுரையில் வைகோ கூறினார்.

மதுரை,

எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் மூலம் மக்கள் செல்வாக்கை தி.மு.க. பெற்று வருகிறது. நடைபெற இருக்கும், ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியினுடைய ஆதரவு பெற்றிருக்கின்ற காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. சனாதன சக்திகளை ஊக்குவித்து இந்துத்துவா தத்துவத்தை நிலை நாட்டலாம் என்று கருதி தந்தை பெரியாரின் மண்ணில், பாரதீய ஜனதா கட்சியின் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. அவர்கள் கோடிக்கணக்கிலே பணம் செலவழிக்கலாம். ஆனாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது.

அதற்கு திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் என்னுடைய சகோதரர் மு.க.ஸ்டாலின் ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டார். அந்த அளவுக்கு தமிழ்நாடு பண்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்தியாவுக்கு வழிகாட்டுகின்ற மாநிலமாக தமிழ்நாடு இன்றைக்கு இருக்கிறது. இதுவரை வேறு மாநிலங்களில் முயற்சிக்காத திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி கொண்டு வருகிறது. ஆகவே இந்த அரசு மக்கள் செல்வாக்கை நாளுக்குநாள் அதிகம் பெற்று வருகிறது என்பதுதான் நடைமுறை உண்மையாகும்.

ஆஸ்பத்திரிகளாக...

தமிழக கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. அரசியலில் ஓய்ந்து போய், தோற்றுப்போனவர்களுக்கு பதவி கொடுப்பதற்காக இந்த கவர்னர் பதவி, மாளிகைகள் உருவாக்கப்பட்டன. கவர்னர் மாளிகைகளை ஏழை எளிய மக்களுக்கான ஆஸ்பத்திரிகளாக பயன்படுத்தலாம் என்று மகாத்மா காந்தி கூறினார். அதுபோல், ஆஸ்பத்திரிகளாக மாற்றலாம்.

தமிழக கவர்னர் அரசியல் சட்டத்திற்கு புறம்பாக, அரசியல் சட்ட விதிகளுக்கு புறம்பாக நாளும் பேசி வருகிறார். தமிழ்நாட்டை, தமிழகம் என்று சொல்லிவிட்டு, அதை மறைக்க வேண்டும் என்பதற்காக போலித்தனமான விளக்கங்களை கொடுக்கிறார். அதிலிருந்து அவருக்கு தமிழ்நாட்டைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்பது நன்றாக புரிகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story