சனாதன தர்மம், இந்து மதம் குறித்த கவர்னரின் பேச்சுகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வராது - கவர்னர் மாளிகை


சனாதன தர்மம், இந்து மதம் குறித்த கவர்னரின் பேச்சுகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வராது - கவர்னர் மாளிகை
x
தினத்தந்தி 15 Oct 2022 9:45 AM GMT (Updated: 15 Oct 2022 10:29 AM GMT)

சனாதன தர்மம், இந்து மதத்தின் அர்த்தம் குறித்த கவர்னரின் பேச்சுகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வராது என கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து, அதை பின்பற்றுவதே சிறப்பு என வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்க கோரி கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி என்பவர் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி மனு அனுப்பி இருந்தார்.

அதில், சனாதன தர்மம் குறித்து அதிகம் பேசும் நபராக இருப்பதால், அதுகுறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க சரியான நபர் என குறிப்பிட்டு, 19 கேள்விகளை மனுவில் முன்வைத்துள்ளார்.

அதன்படி,

  • சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன?
  • சனாதன கொள்கைகளுக்கான உரைகள் ஏதும் உள்ளதா அல்லது செவி வழி தகவல் மட்டும் தானா?
  • சனாதன தர்மத்தை உருவாக்கியவர் அல்லது எழுதியவர் யார்?
  • தமிழ் இலக்கியம் அல்லது திராவிட கலாச்சாரத்தில் சனாதன தர்மம் குறித்து எழுதப்பட்டுள்ளதா அல்லது பேசப்பட்டுள்ளதா?
  • சனாதன தர்மத்தை பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலோ அல்லது உலகில் வேறு எந்த நாட்டிலோ பின்பற்றுகிறார்களா?
  • சனாதன தர்மத்தை கிறிஸ்தவர்களோ இஸ்லாமியர்களோ பின்பற்றுகிறார்களா?
  • இந்து என்பது யார்? ஏதேனும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ளதா?
  • 1964-ல் லக்னோவில் வெளியிடப்பட்ட பெர்சிய மொழி அகராதியில் இந்து என்றால் திருடன், அடிமை, வழிப்பறியாளர் என பொருள்படும்படி குறிப்பிடப்பட்டுள்ள அர்த்தம் சரியா?
  • ஆங்கிலேயர்கள் இந்து சட்டம் கொண்டு வரும் வரை திராவிடர்களுக்கு இந்துயிசம் பற்றி எதுவும் தெரியாது என்பது உண்மையா?
  • இந்து என்கிற வார்த்தையை உருவாக்கியது யார்? அந்த வார்த்தைக்கான அர்த்தம் ஏதேனும் இந்திய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதா?
  • சனாதன தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா அல்லது வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்துவிட்டார்களா?
  • உயிருடன் இருக்கின்றார்கள் என்றால் எங்கு வசிக்கிறார்கள்? அவர்களுடைய அன்றாட பணிகள் என்ன? அவர்களுக்கு யார் உடைகளை தைத்துக் கொடுப்பது? அவர்கள் உடைகள் மற்றும் நகைகளை எங்கே வாங்குகிறார்கள்?
  • ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் நீங்கள் உறுப்பினரா?
  • மிகப்பெரிய தத்துவஞானியும், திராவிட இயக்கத்தின் நிறுவனருமான தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறீர்களா? ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஏன்?
  • நான்கு வர்ணங்கள் உள்ளதாக கூறும் இந்து மதத்தில் சதுர் வர்ண தர்மத்தை உருவாக்கியது யார்?
  • நீங்கள் சதுர் வர்ண தர்மத்தை பின்பற்றி, அதை கடைபிடிக்கிறீர்களா?
  • மற்ற மதங்களால் சதுர் வர்ண தர்மம் ஏன் பின்பற்றப்படவில்லை?
  • தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல், பொது நிகழ்ச்சிகளில் பேச அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த விதி உங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது?
  • அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல், அரசியலமைப்பு சட்டம் விலக்கு அளிக்காமல் உள்ள நிலையில், தன்னிச்சையாக பேசுவது அரசியலமைப்புச் சட்ட மீறல் இல்லையா?

இந்த கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்கும்படி கோரிக்கை வைத்திருந்தார். தற்போது இந்த கேள்விகள் தொடர்பாக கவர்னர் மாளிகை ஒரு விளக்கம் அளித்துள்து. அதில், சனாதன தர்மம், இந்து மதம் அதன் அர்த்தம் குறித்து கவர்னர் பேசிய தகவல்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.


Next Story