பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்


பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 Oct 2023 11:30 PM GMT (Updated: 15 Oct 2023 11:31 PM GMT)

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் கல்லறைத்தோட்டம் அருகே தொடர் முழக்க போராட்டம் நேற்று நடைபெற்றது.

திண்டுக்கல்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் கல்லறைத்தோட்டம் அருகே தொடர் முழக்க போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜோசப் சேவியர் வரவேற்றார். தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்தார். கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான நிலுவை இல்லா அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு, ஆசிரியர்கள் உயர்கல்விக்கு பழைய முறைப்படி ஊக்க ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் செல்வம், காப்பீட்டு ஊழியர் சங்க கோட்ட செயலாளர் வாஞ்சிநாதன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில இணை செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story