பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 97 மனுக்களுக்கு தீர்வு


பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 97 மனுக்களுக்கு தீர்வு
x

தர்மபுரியில் காவல் துறை சார்பில் நேற்று நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் 97 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

தர்மபுரி

குறை தீர்க்கும் முகாம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் அளிக்கும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.

97 மனுக்களுக்கு தீர்வு

இதேபோல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோவன், ராமச்சந்திரன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர். இந்த முகாமில் நிலப்பிரச்சினைகள், சொத்து பிரச்சினைகள், வழிப்பாதை தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மொத்தம் 97 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் தொடர்பாக மனுதாரர்கள் மற்றும் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து 97 மனுக்களுக்கும் உரிய தீர்வு காணப்பட்டது. இதேபோல் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டிடம் 28 மனுக்கள் வழங்கப்பட்டன. இந்த மனுக்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story