குரூப்-2, 2 ஏ, 3 ஏ அட்டவணையில் இல்லை: அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா?-தேர்வர்கள் கருத்து


குரூப்-2, 2 ஏ, 3 ஏ அட்டவணையில் இல்லை: அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா?-தேர்வர்கள் கருத்து
x

குரூப்-2, 2 ஏ, 3 ஏ பணிக்கான தேர்வுகள் குறித்த அறிவிப்பு இடம்பெறாத அட்டவணையை அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருப்பது ஏமாற்றம் அளிக்கிறதா? என்று தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சேலம்

'காத்துட்டா இருந்தாலும், அது கவர்மெண்ட் துட்டா இருக்கணும்', 'அரசாங்க உத்தியோகம்னா, சும்மாயில்லே?' -இது போன்ற வாய்மொழிகள் இன்னமும் கிராமங்களில் வலம் வருகின்றன. பணி பாதுகாப்பு, சுதந்திரம், கணிசமான சம்பளம், பதவி உயர்வுக்கான வாய்ப்பு, ஓய்வூதியம் போன்ற காரணிகளே, பொதுவாக ஒருவரை அரசு வேலைக்கு ஈர்ப்பதாக பார்க்கப்படுகிறது.

ஒருகாலத்தில் அரசு துறைகளில் இருக்கும் பணிகளுக்கு ஆட்களை கூப்பிட்டு, கூப்பிட்டு கொடுத்து இருக்கிறார்கள். காலப்போக்கில் கல்வியறிவு அதிகரித்து, படித்து முடிக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்தது.

டி.என்.பி.எஸ்.சி.

அதன் பின்னர், தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியில் சேர்க்கும் முறை கடந்த 1929-ம் ஆண்டு வாக்கில் இருந்து தொடங்கி இருக்கிறது. முதலில் இந்த அமைப்புக்கு மெட்ராஸ் தேர்வாணையம் என்ற பெயர் இருந்த நிலையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பிறகு, 1957-ம் ஆண்டில் மெட்ராஸ் அரசு பணியாளர் தேர்வாணையம் என்றும், அதைத்தொடர்ந்து, சென்னை மாகாணம், தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டபோது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) என்றும் மாறியது.

1954-ம் ஆண்டில் வகுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறை மற்றும் நடத்தை விதிகள் அடிப்படையில் இந்த ஆணையம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாகவே அரசுத்துறைகளில் அடிமட்ட அளவில் இருந்து உயர்மட்ட அளவில், பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குரூப்-1, 2, 2 ஏ, 3, 4 என பிரிவுகளாக பிரித்து நிரப்பப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறைகளில் ஓய்வு பெறுபவர்களின் காலிப்பணியிடங்கள், புதிதாக துறைகளில் தோற்றுவிக்கப்படும் இடங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு, அந்தந்த துறைகள் அளிக்கும் பட்டியல்களை கொண்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுத்திட்ட அட்டவணையை வெளியிட்டு வருகிறது.

அந்த அட்டவணையில் குறிப்பிட்டு இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்புகளை வெளியிடுவதோடு, அதற்காக விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு என அனைத்து பணிகளையும் மேற்கொண்டு, அந்த பணிக்கு தகுதிவாய்ந்தவர்களை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு செய்து பணி வழங்குகிறது. தொழில்நுட்பங்கள் வளர, வளர அதற்கு ஏற்ப தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. குறுக்கு பாதைகளை தேடுபவர்கள் எங்கேதான் இல்லை? என்று சொல்லும் வகையில், இந்த தேர்வு முறைகளிலும் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் அரங்கேறியது என்பது, மறுக்க முடியாத உண்மை.

வயது விலக்கு

அந்த சுவடுகள் மீண்டும் டி.என்.பி.எஸ்.சி. மீது பதிந்துவிடக்கூடாது என்ற நோக்கில், அதனை பொறுப்பேற்று முன்னெடுத்து செல்லும் அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தற்போது அதுபோன்ற முறைகேடுகள் பற்றிய எந்த குற்றச்சாட்டுகளுக்கும் இடம் கொடுத்துவிடாதபடி, ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த எச்சரிக்கையுடன் தேர்வை நடத்தி வருகின்றனர். இதில் குரூப்-4, குரூப்-2, 2 ஏ ஆகிய பிரிவுகளில் தான் அதிகமான பணியிடங்களும் இருக்கும் அதிகமான போட்டிகளும் இருக்கும்.

உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட குரூப்-4 பணியிடங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் 21 லட்சத்து 85 ஆயிரத்து 328 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இது பெருமையா? என்று கேட்டால், இல்லை என்றே சொல்ல முடியும். ஏனென்றால், படித்து முடித்த இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் எவ்வளவு பேர் காத்துக்கிடக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணமாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக எதிர்பார்த்தபடி பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படாததால், அதிகபட்ச வயது வரம்பை கடந்தவர்களுக்காக, 2 ஆண்டுகள் வயது விலக்கு அளிக்கப்பட்டது. இந்த சலுகைகளை பெற்றவர்களுக்கு நடப்பு ஆண்டில் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்களில் தேர்வாவது தான் கடைசி வாய்ப்பாக இருக்கும்.

அதிர்ச்சி அளிக்கிறது

அப்படி எதிர்பார்த்து காத்திருந்த பலருக்கு, டி.என்.பி.எஸ்.சி. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ஆண்டுத்திட்ட போட்டி தேர்வு அட்டவணை ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய குரூப்-2, 2 ஏ, 3 ஏ பதவிகளுக்கான அறிவிப்பு இல்லாதது, குரூப்-4 பணியிடங்களுக்கான காலி இடங்கள் எவ்வளவு? என்ற விவரங்கள் தெரிவிக்காதது அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன.

குரூப்-1 தேர்வுக்கு ஆகஸ்டு மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு நவம்பரில் முதல் நிலை, 2024 ஜூலையில் முதன்மை, டிசம்பரில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் எத்தனை பணியிடங்கள் என்ற விவரங்கள் இல்லாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டுகளில் இருந்து பார்க்கும்போது, ஆண்டுக்கு 23 ஆயிரம், 10 ஆயிரம், 9 ஆயிரம், 8 ஆயிரம் காலிப்பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் என்ற அளவிலேயே பணியிடங்கள் அறிவிக்கப்படுகின்றன.

சோளப்பொரி

இது யானை பசிக்கு சோளப்பொரி போல் அல்லவா தெரிகிறது? வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கானோருக்கு, ஆயிரத்தில் பணியிடங்கள் என்பது எப்படி சரியாக இருக்கும்? அதிலும் இந்த ஆண்டு அறிவிப்பில் இதுவரை 1,754 காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் மட்டுமே டி.என்.பி.எஸ்.சி. அட்டவணையில் இடம்பெற்றிருப்பது, அரசுப்பணிகளில் சேரவேண்டும் என்ற ஆர்வத்தில் இரவு பகலாக படித்து கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது.

இதுபற்றி தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

திட்டமிட்டு தேர்வை நடத்த வேண்டும்

ஸ்ரீதர் (சேலம் அழகாபுரம்):-

கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக போட்டி தேர்வுகள் சரிவர நடத்தப்படாததால், புதிய அறிவிப்புகளில் காலிப்பணியிடங்கள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பெரிய ஏமாற்றமாகிவிட்டது. எப்படியும் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்பதே லட்சியமாக கொண்டுள்ளேன். இதனால் போட்டி தேர்வுக்காக எனது முழு உழைப்பையும் கொடுத்து வருகிறேன். ஆண்டுக்கு ஒரு முறையாவது தேர்வை நடத்தினால்தான் எங்களை போன்ற தேர்வர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 30 சதவீதம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அறிவிப்புகளில் அது சம்பந்தமான எந்த தகவலும் இல்லை. இதனால் அரசு பணிக்காக டி.என்.பி.எஸ்.சி. அறிவிக்கும் தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் என்னை போன்ற தேர்வர்களின் நிலைமை என்ன ஆவது? எனவே தேர்வர்களின் நிலையை புரிந்துகொண்டு, சரியான முறையில் திட்டமிட்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வை நடத்த வேண்டும்.

மிகுந்த ஏமாற்றம்

போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவி கனிமொழி (ஓமலூர்):-

நான் கடந்த 5 ஆண்டுகளாக போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறேன். கடந்த போட்டி தேர்வில் வெற்றியின் இறுதி வரை வந்தேன். இதனால் இந்தாண்டு நடக்கும் தேர்வில் வெற்றி பெற்று விரைவில் அரசு பணிக்கு சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் படித்து கொண்டு இருக்கிறேன். ஆனால் சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையம் வெளியிட்ட 2023-ம் ஆண்டு வருடாந்திர தேர்வு அட்டவணையை பார்க்கும்போது மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. பொறியியல் பட்டதாரிகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து 1,754 பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. இதனால் என்னை போன்ற அறிவியல் பட்டதாரிகள் மற்றும் இதர பட்டதாரிகளுக்கு குறைந்த அளவில் மட்டுமே காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்து தேர்வுகள் வரும் என்று எதிர்பார்த்த நபர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, மற்றும் 2 ஏ போட்டி தேர்வுக்கான அறிவிப்பு பற்றி எதுவும் இல்லை. இதனால் 2025-ம் ஆண்டு வரை போட்டி தேர்வுக்கு படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

ஏராளமான காலிப்பணியிடங்கள்

அருண் (சேலம் ஆண்டிப்பட்டி):-

பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்துள்ள நான், அரசு பணிக்காக டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். ஆனால் இதுவரை தேர்ச்சி பெற முடியவில்லை. இருப்பினும், விடாமுயற்சியுடன் போட்டி தேர்வை எதிர்கொண்டு வருகிறேன். இந்த முறை வெளியிடப்பட்டு இருக்கும் அட்டவணை அதிர்ச்சியை தந்திருக்கிறது. குரூப்-2, 2 ஏ, 3 ஏ பிரிவுகளில் புதிய அறிவிப்புகள் இல்லை. குரூப்-4-க்கு வெறும் அறிவிப்பு மட்டும் உள்ளது. இதன்படி பார்க்கையில் இந்த ஆண்டு தேர்வே இல்லாதது போலவே தெரிகிறது. ஒவ்வொரு அரசு துறைகளிலும் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டாலே வேலையில்லா இளைஞர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

முயற்சியை கைவிடாமல்..

பிரகாஷ் (வாழப்பாடி):-

பட்டப்படிப்பு படித்துள்ள நான் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதி வருகிறேன். எப்படியாவது அரசாங்க வேலையில் சேர வேண்டும் என்பது எனது லட்சியம். இதற்காக தயாராகி வருகிறேன். தற்போது குடும்பத்தை வழிநடத்த வேண்டும் என்பதற்காக வாழப்பாடியில் ஆட்டுக்கால் சூப் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். இருந்தாலும், விடாமுயற்சியுடன் போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறேன். சமீபத்தில் வெளியிடப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. அட்டவணையில் நிறைய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்தேன். குரூப்-2, 2 ஏ, 3 ஏ பிரிவுகளில் புதிய அறிவிப்புகள் இல்லை. குரூப்-4-க்கு வெறும் அறிவிப்பு மட்டும் உள்ளது. இதன்படி பார்க்கையில் இந்த ஆண்டு தேர்வே இல்லாதது போலவே தெரிகிறது. இதனால் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துவிட்டது. இருந்தாலும், எனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு பணியாளர்களுக்கு கொரோனா காலத்தில் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக மாற்றி அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டதால், ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாமல் இருக்கிறது என்றும், இனி வரக்கூடிய நாட்களில் 60 வயதை எட்டுபவர்கள் பணி இடங்கள் காலியிடங்களாக கருதி பட்டியல் வரும். அவ்வாறு வரும்போது, அந்த காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் சொல்லப்படுகிறது.

கடந்த 12 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட பணியிடங்கள்

கடந்த 2012-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் இடைபட்ட 12 ஆண்டுகள் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட போட்டித்தேர்வு அட்டவணையில் எவ்வளவு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன என்ற விவரங்கள் வருமாறு:-

ஆண்டு - பணியிடங்கள்

2012 - 23,079

2013 - 10,105

2014 - 5,334 (குரூப்-2, குரூப்-4 பணிகளுக்கான அறிவிப்பு இல்லை)

2015 - 9,078

2016 - 7,996

2017 - 3,781

2018 - 3,285 (குரூப்-4 பணிக்கான அறிவிப்பு இல்லை)

2019 - 8,865

2020 - 81 (கொரோனா பாதிப்பு இருந்த நேரம்)

2021 - 1,818 (கொரோனா பாதிப்பு இருந்த நேரம்)

2022 - 14,028

2023 - 1,754


Next Story