குட்கா முறைகேடு வழக்கு: சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம்


குட்கா முறைகேடு வழக்கு: சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம்
x

குட்கா முறைகேடு வழக்கு மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதாக சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை சி.பி.ஐ. விசாரித்து வருகின்றது. இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த சி.பி.ஐ., இவர்களுக்கு எதிராக சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா , முன்னாள் டிஜிபி, சென்னை காவல் துறை முன்னாள் ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் பிழையை சரி செய்து விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் ஆவணங்களுடன் தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணைக்கான ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, கடந்த மூன்று ஆண்டுகளாக இதே பதிலை மட்டுமே கூறுவதாக கண்டனம் தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை மே 2-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.


Next Story