காரில் இருந்த 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


காரில் இருந்த 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

நாமக்கல் அருகே சாலையோரம் கேட்பாரற்று நின்ற காரில் இருந்த 200 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல்

200 கிலோ புகையிலை

நாமக்கல் அருகே உள்ள முதலைப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையோரம் நேற்று காலை சென்னை பதிவு எண் கொண்ட கார் ஒன்று கேட்பாரற்று நின்றுகொண்டு இருந்தது. தகவல் அறிந்தநல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை சோதனை செய்தனர்.

அப்போது காரின் முன்பக்க டயர் ஒன்று பஞ்சராகிய நிலையில் இருந்தது. மேலும் காரில் யாரும் இல்லை. அதைத்தொடர்ந்து போலீசார் காரின் பின்புறத்தை திறந்து பார்த்தனர். அப்போது அங்கு தலா 10 கிலோ வீதம் 20 மூட்டைகளில் 200 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

ரூ.2 லட்சம் மதிப்பு

இதையடுத்து கார் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், காரின் டயர் பஞ்சரானதால் புகையிலை பொருட்களை கடத்தி வந்த மர்மநபர்கள் காரை சாலையோரம் விட்டுச்சென்றது தெரியவந்தது‌. மர்மநபர்கள் விட்டுச்சென்ற காரின் பதிவு எண் மற்றும் காரில் இருந்த செல்போன் எண் ஆகியவற்றின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story