தர்மபுரியில்இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலைபோலீசார் விசாரணை


தர்மபுரியில்இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலைபோலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 May 2023 7:00 PM GMT (Updated: 6 May 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இளம் பெண் தர்மபுரியில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புத்தக வடிவமைப்பாளர்

தர்மபுரி ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவருடைய 2-வது மகள் பிரித்திஜா வாணி (வயது 24). பட்டப்படிப்பை முடித்த இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் புத்தக வடிவமைப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

தர்மபுரியில் உள்ள வீட்டிலிருந்தே இந்த பணிகளை மேற்கொண்டு வந்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கச் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அறையின் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை தட்டிய போது உள் பக்கம் தாழிடப்பட்டிருப்பது தெரியவந்தது.

தற்கொலை

இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அந்த அறைக்குள் உள்ள மின்விசிறியில் பிரித்திஜா வாணி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் அங்கு சென்று இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரித்திஜா வாணி கடந்த ஒரு ஆண்டாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story