ரெயில்களில் வடமாநில தொழிலாளர்கள் தொல்லை


ரெயில்களில் வடமாநில தொழிலாளர்கள் தொல்லை
x

தமிழ்நாட்டுக்கு தினமும் வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரிய நகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரை அவர்கள் ஊடுருவி விட்டார்கள்.

அரியலூர்

வடமாநில தொழிலாளர்கள்

பெரிய நிறுவனம் என்றாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, அங்கிங்கெனாதபடி எங்கும் வேலை செய்கிறார்கள். ஒரு சிறு டீக்கடையை எடுத்துக் கொண்டாலும் கல்லாவில் இருப்பவரை தவிர, பலகாரங்கள் போடுவது, டீ போடுவது, கிளாசுகளை கழுவுவதுவரை அவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

அவர்கள் கடும் உழைப்பாளிகள். மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதற்கு இணையாக உழைக்க தெரிந்த நம்மவர்கள் என்ன ஆனார்கள்?

இலவசங்களால் கொஞ்சம் வயிற்றில் பசியாறிப் போவதால், சோம்பேறி ஆனார்கள். விளைவு நாம் செய்ய வேண்டிய வேலைகளை, வடமாநிலத்தார் வந்து செய்கிறார்கள்.

கல்லாவை நம்மிடம் அவர்கள் கைப்பற்றாமல் இருந்தால், சரி.

தொல்லைகள்

அதேநேரம் வடமாநில தொழிலாளர்களின் அதிக வரவால் நமக்கு பல்வேறு வேலைகள் நடந்தாலும் தொல்லைகளும் இருக்கத்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக சொல்வது என்றால், ரெயில் பயணங்களில் அவர்களின் செயல்கள் நம்மை எரிச்சல் அடைய செய்கின்றன. பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது, வகுப்பு மாறி பயணம் செய்வது, சாதாரண டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு முன்பதிவு செய்த பெட்டிகளில் புகுந்து பயணம் செய்வது, பாக்குகளை வாயில் போட்டு குதப்பி கண்ட, கண்ட இடங்களில் உமிழ்வது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது போன்ற சட்டவிரோதச் செயல்களை அச்சம் இல்லாமல் செய்கிறார்கள்.

இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்துகள் வருமாறு:-

குடும்பத்துடன் பயணிக்க முடியாத அவலம்

அரியலூர் மாவட்டம் தாமரைகுளத்தை சேர்ந்த இளவரசன்:- முன்பெல்லாம் பொதுப்பெட்டியில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்தவர்கள் முன்பதிவு செய்த பெட்டிகளில் தவறுதலாக கூட ஏறமாட்டார்கள். முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் நிம்மதியாகவும், அச்சமின்றியும் பயணம் செய்தார்கள். ஆனால் தற்போது 3 மாதங்களுக்கு முன்பே பயண சீட்டை முன்பதிவு செய்தாலும், வட மாநில தொழிலாளர்கள் பயண சீட்டு எடுக்காமலேயே முன்பதிவு செய்த இருக்கையில் அமர்ந்து பயணம் செய்கிறார்கள். இதனால் முறையாக டிக்கெட் வாங்கி பயணம் செய்யும் பயணிகளுக்கு உட்காரக்கூட இடம் கிடைப்பதில்லை. இதனால் குடும்பத்துடன் ரெயிலில் பயணிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை ரெயில்வே நிர்வாகம் வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நோயாளிகள், குழந்தைகள் அவதி

தா.பழூரை சேர்ந்த தங்கையன்:- பொதுவாக ரெயில் பயணங்களில் வட மாநிலத்தவர்கள் பயணிக்கும் போது அந்த பெட்டியில் நாமும் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதைவிட மோசமான அனுபவம் வாழ்க்கையில் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்காது. ரெயில் பெட்டியில் அமர்ந்து பயணிக்கும் இடம் மட்டுமல்லாது சுமைகள் வைக்கும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு சொகுசாக அமர்ந்து வருவதற்கு தயாராகி விடுகின்றனர். நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என யார் வந்தாலும் அவர்களுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள். அவர்களிடம் பேசினாலும் எந்த பயனும் இருப்பதில்லை. மோசமாக நடந்து கொள்வதோடு சக பயணிகளுக்கு பெரும்பாலும் தொந்தரவாகவே இருக்கின்றனர். அவர்களை கட்டுப்படுத்த ரெயில் பெட்டிகளில் போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதுகாப்புத்துறை அதிகாரிகள்

இதுகுறித்து சென்னையில் ரெயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறும் போது, 'ரெயில்களில் டிக்கெட் இல்லாமலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டும் 2-ம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் ஏறி அனைத்து இருக்கைகளையும் வடநாட்டு தொழிலாளர்கள் ஆக்கிரமிக்கின்றனர். முறையாக டிக்கெட் வாங்கி பயணம் செய்யும் பயணிகளுக்கு உட்காரக்கூட இடம் கிடைப்பதில்லை. பயணிகளுடன் வடநாட்டு தொழிலாளர்கள் இடையூறு செய்வதுடன் அராஜகத்தில் ஈடுபடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர்கள் எங்களுக்கு புகார் அளிக்கின்றனர். அதன் அடிப்படையில் வடநாட்டு தொழிலாளர்களை அடுத்த ரெயில் நிலையத்தில் 'நீ இறங்கி போ பையா' என்று கூறி இறக்கி விட்டு நடவடிக்கை எடுக்கிறோம். சமீபத்தில் கூட கேரளாவில் இருந்து ஜார்கண்ட் நோக்கி சென்ற ரெயில் சேலம் அருகே வந்த போது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பாக ரெயில்வே நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்' என்றனர்.

டிக்கெட் கட்டண சலுகை ரத்து; சேவையும் கேள்விக்குறி-மூத்த பயணிகள் ஆதங்கம்

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட் கட்டண சலுகைகளை கொரோனாவிற்கு பிறகு ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. தற்போது யாராக இருந்தாலும் முழுக் கட்டணத்தில் தான் பயணம் செய்ய வேண்டியது இருக்கிறது. அதுவும் குறிப்பாக தட்கல், பிரீமியம் தட்கல் என்ற முறையில் ஆம்னி பஸ்களில் விதிக்கப்படும் கட்டணம் போன்று கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் உயர்த்தி வசூலித்து வருகிறது. வேறு வழியின்றி முதியவர்கள், பெண்கள், நோயாளிகள் அதிகக்கட்டணம் செலுத்தி ரெயிலில் பயணம் செய்கின்றனர். ஆனால் கட்டணத்தை முழுமையாக பெறும் ரெயில்வே நிர்வாகத்தால் ஏன் முழுமையான சேவையை வழங்க முடியவில்லை. உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருந்தும் ரெயிலில் முறையாக பயணிக்க முடியாத நிலைக்கு யார் காரணம்? இதற்கு எப்போது ரெயில்வே நிர்வாகம் தீர்வு காணப்போகிறது என்று மூத்த பயணிகள் சிலர் முணுமுணுத்து சென்றனர்.


Next Story