ரெயில்களில் வடமாநில தொழிலாளர்கள் தொல்லை


ரெயில்களில் வடமாநில தொழிலாளர்கள் தொல்லை
x

தமிழ்நாட்டுக்கு தினமும் வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரிய நகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரை அவர்கள் ஊடுருவி விட்டார்கள்.

பெரம்பலூர்

வடமாநில தொழிலாளர்கள்

பெரிய நிறுவனம் என்றாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, அங்கிங்கெனாதபடி எங்கும் வேலை செய்கிறார்கள். ஒரு சிறு டீக்கடையை எடுத்துக் கொண்டாலும் கல்லாவில் இருப்பவரை தவிர, பலகாரங்கள் போடுவது, டீ போடுவது, கிளாசுகளை கழுவுவதுவரை அவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

அவர்கள் கடும் உழைப்பாளிகள். மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதற்கு இணையாக உழைக்க தெரிந்த நம்மவர்கள் என்ன ஆனார்கள்?

இலவசங்களால் கொஞ்சம் வயிற்றில் பசியாறிப் போவதால், சோம்பேறி ஆனார்கள். விளைவு நாம் செய்ய வேண்டிய வேலைகளை, வடமாநிலத்தார் வந்து செய்கிறார்கள்.

கல்லாவை நம்மிடம் அவர்கள் கைப்பற்றாமல் இருந்தால், சரி.

தொல்லைகள்

அதேநேரம் வடமாநில தொழிலாளர்களின் அதிக வரவால் நமக்கு பல்வேறு வேலைகள் நடந்தாலும் தொல்லைகளும் இருக்கத்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக சொல்வது என்றால், ரெயில் பயணங்களில் அவர்களின் செயல்கள் நம்மை எரிச்சல் அடைய செய்கின்றன. பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது, வகுப்பு மாறி பயணம் செய்வது, சாதாரண டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு முன்பதிவு செய்த பெட்டிகளில் புகுந்து பயணம் செய்வது, பாக்குகளை வாயில் போட்டு குதப்பி கண்ட, கண்ட இடங்களில் உமிழ்வது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது போன்ற சட்டவிரோதச் செயல்களை அச்சம் இல்லாமல் செய்கிறார்கள்.

இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்துகள் வருமாறு:-

சட்டப்படி நடவடிக்கை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெருமத்தூரை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் ராமர்:- தற்போது தமிழகத்திற்கு வட மாநிலங்களில் இருந்து வருவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த அளவுக்கு தமிழகத்தில் பல்வேறு தொழில்களில் வட மாநிலத்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் ரெயில்களில் டிக்கெட் எடுத்து பயணம் செய்வதில்லை. அவர்கள் டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் முன்பதிவு பெற்ற பெட்டியில் ஏறி பயணம் செய்கின்றனர். அந்த பெட்டியில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்த பயணிகளுக்கு கூட இடம் தர மறுத்து, அவர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். ரெயிலில் முன்பதிவில்லா பெட்டியில் டிக்கெட் எடுக்காமல் வடமாநிலத்தவர்கள் கழிவறையில் அமர்ந்து பயணிக்கின்றனர். இதனால் மற்ற பயணிகள் கழிவறைக்கு கூட செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நான் வெளி மாநிலங்களுக்கு விளையாட ரெயிலில் பயணம் செய்யும் போதெல்லாம் இந்த மாதிரி பிரச்சினையை நிறைய சந்தித்து இருக்கிறேன். ரெயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் வட மாநிலத்தவர்களை டிக்கெட் பரிசோதகர்கள் எச்சரித்து கீழே இறக்கி விடுகின்றனர். ஆனால், அபராதம் விதிப்பதில்லை. இதனால் அவர்கள் இந்த மாதிரி தொடர்ந்து டிக்கெட் இல்லாமல் ரெயிலில் பயணம் செய்வது தொடர் கதையாகிறது. எனவே ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் வட மாநிலத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இடம் ஆக்கிரமிப்பு

அணைப்பாடியை சேர்ந்த மூர்த்தி:- வடமாநில தொழிலாளர்கள் சென்னை, திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லட்சக்கணக்கில் பணியாற்றி வருகிறார்கள். இதனால் தமிழர்களின் வேலை வாய்ப்புகள் சிறிது சிறிதாக பறிபோய் கொண்டு வருகிறது. வடமாநில தொழிலாளர்கள் பெரும்பாலும் ரெயில் போக்குவரத்தையே பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அவர்கள் கும்பல் கும்பலாக ரெயில் டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டிகள் மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்கின்றனர். மேலும், முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களின் இடங்களையும் ஆக்கிரமித்து கொள்கின்றனர். அவர்களிடம் தன்மையாக கேட்டால் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். சில சமயங்களில் கைகலப்பு கூட நேரிடுகிறது. இதை டி.டி.ஆரிடம் கூறினால் அவரும் கண்டுகொள்ளாமல் அந்த இடத்தை விட்டு நழுவி விடுகிறார். எனவே ரெயில்வே அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதுகாப்புத்துறை அதிகாரிகள்

இதுகுறித்து சென்னையில் ரெயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறும் போது, 'ரெயில்களில் டிக்கெட் இல்லாமலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டும் 2-ம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் ஏறி அனைத்து இருக்கைகளையும் வடநாட்டு தொழிலாளர்கள் ஆக்கிரமிக்கின்றனர். முறையாக டிக்கெட் வாங்கி பயணம் செய்யும் பயணிகளுக்கு உட்காரக்கூட இடம் கிடைப்பதில்லை. பயணிகளுடன் வடநாட்டு தொழிலாளர்கள் இடையூறு செய்வதுடன் அராஜகத்தில் ஈடுபடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர்கள் எங்களுக்கு புகார் அளிக்கின்றனர். அதன் அடிப்படையில் வடநாட்டு தொழிலாளர்களை அடுத்த ரெயில் நிலையத்தில் 'நீ இறங்கி போ பையா' என்று கூறி இறக்கி விட்டு நடவடிக்கை எடுக்கிறோம். சமீபத்தில் கூட கேரளாவில் இருந்து ஜார்கண்ட் நோக்கி சென்ற ரெயில் சேலம் அருகே வந்த போது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பாக ரெயில்வே நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்' என்றனர்.

டிக்கெட் கட்டண சலுகை ரத்து; சேவையும் கேள்விக்குறி-மூத்த பயணிகள் ஆதங்கம்

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட் கட்டண சலுகைகளை கொரோனாவிற்கு பிறகு ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. தற்போது யாராக இருந்தாலும் முழுக் கட்டணத்தில் தான் பயணம் செய்ய வேண்டியது இருக்கிறது. அதுவும் குறிப்பாக தட்கல், பிரீமியம் தட்கல் என்ற முறையில் ஆம்னி பஸ்களில் விதிக்கப்படும் கட்டணம் போன்று கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் உயர்த்தி வசூலித்து வருகிறது. வேறு வழியின்றி முதியவர்கள், பெண்கள், நோயாளிகள் அதிகக்கட்டணம் செலுத்தி ரெயிலில் பயணம் செய்கின்றனர். ஆனால் கட்டணத்தை முழுமையாக பெறும் ரெயில்வே நிர்வாகத்தால் ஏன் முழுமையான சேவையை வழங்க முடியவில்லை. உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருந்தும் ரெயிலில் முறையாக பயணிக்க முடியாத நிலைக்கு யார் காரணம்? இதற்கு எப்போது ரெயில்வே நிர்வாகம் தீர்வு காணப்போகிறது என்று மூத்த பயணிகள் சிலர் முணுமுணுத்து சென்றனர்.


Next Story