போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, மோர்


போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, மோர்
x

கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, மோர் போன்றவற்றை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி வழங்கினார்.

வேலூர்

கோடை காலம்

வேலூரில் கோடை காலம் தொடங்கி விட்டது. வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ஜூஸ் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். வாகன ஓட்டிகளும் பகலில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். சிலமணிநேரம் வெளியே சென்று வீடு திரும்புபவர்களுக்கு கோடை வெயிலை தாங்க முடிவதில்லை.

ஆனால் வெட்ட வெளியில் வெயிலில் நின்று போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் வெப்பத்தை தாங்கும் நவீன தொப்பிகள் வழங்கப்பட்டுள்ளது.

தொப்பி, மோர்

இந்த நிலையில் வேலூரில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு நேற்று மோர், தண்ணீர், தொப்பிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் மக்கான் சந்திப்பில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார். வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போக்குவரத்து போலீசாருக்கு தொப்பிகள், மோர் வழங்கினார். நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து காட்பாடியில் போக்குவரத்து போலீசாருக்கு கூலிங்கிளாஸ் வழங்கப்பட்டது. இதுகுறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி கூறுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் தொடர்ந்து 120 நாட்களுக்கு போக்குவரத்து போலீசாரின் தாகத்தை தீர்க்க மோர் மற்றும் பழச்சாறு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி போக்குவரத்து போலீசாருக்கு மோர் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது. மேலும் பணியாற்றும் 110 போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங்கிளாஸ் வழங்கப்பட உள்ளது என்றார்.


Next Story