சுகாதார நடைபாதை திட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்


சுகாதார நடைபாதை திட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Nov 2023 1:58 AM GMT (Updated: 4 Nov 2023 10:00 AM GMT)

தொடங்கும் இடத்திலேயே நடைபயிற்சியை முடிக்கும் வகையில் இந்த பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் தூரம் ஆரோக்கியத்துக்கான நடைபயிற்சி பாதை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி நடைபயிற்சிக்காக தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் தூர ஆரோக்கிய நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் பெசன்ட் நகரில் அமைக்கப்பட்டு உள்ளது. தொடங்கும் இடத்திலேயே நடைபயிற்சியை முடிக்கும் வகையில் இந்த பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆரோக்கிய நடைபாதை திறப்பு விழா இன்று பெசன்ட் நகரில் நடந்தது.

கொட்டும் மழையில் முத்துலெட்சுமி பூங்காவில் இருந்து கடற்கரை வரை 2.5 கிலோ மீட்டர் தூரம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடந்து சென்றார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் 38 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு உள்ள நடைபாதைகளை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். சென்னையில் நடைபாதைக்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி மற்றும் பலர் கலந்துகொண்டனர். பிற பகுதிகளில் நடந்த திறப்பு விழாக்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமை தாங்கினார்கள்.


Next Story