கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை; அருவிகளில் வெள்ளப்பெருக்கு


கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை; அருவிகளில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 20 Jun 2023 9:00 PM GMT (Updated: 20 Jun 2023 9:00 PM GMT)

கொடைக்கானலில் கனமழை கொட்டித்தீர்த்தது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திண்டுக்கல்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில், கடந்த 3 நாட்களாக பகல் நேரத்தில் கருமேகம் சூழ்ந்து லேசான சாரல் மழை பெய்தது. இந்நிலையில் நேற்றும் பகல் நேரத்தில் லேசான வெப்பம் நிலவிய நிலையில் 3 மணி அளவில் திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை, சுமார் 1 மணி நேரம் நீடித்தது.

நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது. இதனால் நகர் முழுவதும் பகல் நேரத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த மழை காரணமாக ஏரிச்சாலை பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

மேலும் ஏற்கனவே நட்சத்திர ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வந்த நிலையில், நேற்று பெய்த மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரை ஒட்டியுள்ள பியர் சோலார் அருவி, பாம்பார் அருவி, தேவதை அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாலையில் சாரல் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வந்த மாணவ-மாணவிகள் நனைந்து கொண்டே வீடுகளுக்கு திரும்பினர்.


Next Story