நீர்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி:பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு


நீர்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி:பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
x

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இதேபோல் பவானி ஆற்றில் 9 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.

நீர்பிடிப்பு பகுதி

பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து பில்லூர் அணைக்கு வந்து அங்கிருந்து மேட்டுப்பாளையம் வழியாக பவானிசாகர் அணைக்கு வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமரஹடா வனப்பகுதி வழியாக வரும் மோயாறும் நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது.

நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 256 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 79.12 அடியாக உயர்ந்தது.

தண்ணீர் வரத்து அதிகரிப்பு

பவானி ஆற்றில் வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீரும். கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மலைப்பகுதியில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.83 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 676 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீரும் கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.


Next Story