கனமழை எச்சரிக்கை: 10 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்


கனமழை எச்சரிக்கை: 10 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
x

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மாண்டாஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

புயல் எதிரொலியாக 8ம் தேதி, 09 மற்றும் 10ம் தேதி தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை எதிரொலியாக 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆந்திர பிரதேச கடற்பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற 43 படகுகளில், உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டு இதுவரை 31 படகுகள் கரை சேர்ந்துள்ளன. மேற்கு கடற்கரை பகுதியில் மீன் பிடிக்க சென்ற 543 மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக உள்ளன. மீதமுள்ள 12 படகுகள் விரைவில் கரை வந்து சேரும். மீனவர்கள் கரை திரும்பவும் மீனவ கிராமங்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்ப்பட்டுள்ளது. மேலும் 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. என்று கூறியுள்ளார்.


Next Story