கனமழை எச்சரிக்கை: 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம்


கனமழை எச்சரிக்கை: 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம்
x
தினத்தந்தி 14 Nov 2023 5:14 AM GMT (Updated: 14 Nov 2023 5:40 AM GMT)

மழையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அவசர கடிதம் எழுதியுள்ளார். கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மழையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

எந்தெந்த நாட்களில் எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்பதை வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் முழுமையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

பேரிடர்களைக் கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்கவும், கனமழை, மிக கனமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story