இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை சென்னையில் விமான சேவை பாதிப்பு


இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை சென்னையில் விமான சேவை பாதிப்பு
x

இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. 3 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.

சென்னை

மீனம்பாக்கம்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து நேற்று அதிகாலை வரை இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன.

டெல்லியில் இருந்து 154 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு 11.35 மணிக்கு வந்த விமானம் சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

அதேபோல் ஜெர்மன் நாட்டின் பிராங்க்பார்ட் நகரில் இருந்து 268 பயணிகளுடன் வந்த விமானமும், அதிகாலையில் கொல்கத்தாவில் இருந்து 167 பயணிகளுடன் வந்த விமானமும் தரை இறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பபட்டது. சென்னையில் மழை ஓய்ந்தபிறகு வானிலை சீரானதும் 3 விமானங்களும் மீண்டும் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தன.

மேலும் பாரிஸ் நகரில் இருந்து சென்னை வந்த ஏர்பிரான்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், ஐதராபாத்தில் இருந்து வந்த விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டம் அடித்து விட்டு தாமதமாக தரையிறங்கின.

இதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான பாங்காக், பிராங்க்பார்ட், பாரிஸ் ஆகிய 3 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

சென்னையில் நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு என 8 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.


Next Story