காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: ஒகேனக்கலில் 3-வது நாளாக வெள்ளம்


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: ஒகேனக்கலில் 3-வது நாளாக வெள்ளம்
x

காவிரி ஆற்றில் இன்று 3-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஒகேனக்கல்,

கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மற்றும் கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இதனால் பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர்வரத்து தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலை வந்தடைகிறது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்சட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 1.85 லட்சம் கனஅடியாக தண்ணீர் வந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அதே அளவு நீர்வரத்து நீடித்து வந்தது. இதன் காரணமாக ஐவர்பாணி, ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் வெள்ளநீரில் மூழ்கியது. ஒகேனக்கல் அருவிகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் 7-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசித்த மக்களை பாதுகாப்பாக மீட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் இன்று 3-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி கரையோர பகுதிகளில் வருவாய் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story