ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்


தினத்தந்தி 25 Oct 2023 12:30 AM GMT (Updated: 25 Oct 2023 12:30 AM GMT)

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டிக்கு 60 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

நீலகிரி

ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. எனவே ஊட்டியில் நிலவும் 2-வது சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் ஊட்டியில் சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது. தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

அவர்கள் மலர் மாடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் பூத்துக் குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர்.

2-வது சீசனில் 20 ரகங்களை சேர்ந்த 5 ஆயிரம் பூந்தொட்டிகள் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. அவற்றை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா, இலை பூங்கா ஆகிய அலங்கார வேலிகள் முன்பு செல்பி எடுத்துக் கொண்டனர். பெரிய புல்வெளி மைதானத்தில் குடும்பத்தினருடன் அமர்ந்து பூங்காவின் எழில் மிகுந்த அழகை கண்டு ரசித்தனர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நேற்று முன்தினம் அதிகபட்சமாக 21 ஆயிரம் பேர் வந்தனர். மொத்தமாக இந்த நான்கு நாட்களில் சுமார் 60 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளனர்.


ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்தனர். அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே சுற்றுலா பயணிகள் நீண்டவரிசையில் காத்திருந்து நுழைவு கட்டண டிக்கெட் எடுத்தனர்.

அதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, கர்நாடகா தோட்டக்கலை பூங்கா, பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டதால் அதிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் தங்கும் விடுதிகள் நிரம்பின. இதேபோல் கடைசி நாளான நேற்று மொத்த வாகனங்களும் ஊட்டியில் இருந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கு கிளம்பியதால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. குறிப்பாக கூடலூர் கக்கனல்லா சோதனைச் சாவடியில் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதையடுத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். ஆனாலும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.


Next Story