உடுமலையில் இந்து முன்னணி பிரமுகர் கொடூரமாக வெட்டி படுகொலை....!


உடுமலையில் இந்து முன்னணி பிரமுகர் கொடூரமாக வெட்டி படுகொலை....!
x

உடுமலையில் இந்து முன்னணி பிரமுகர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

திருப்பூர்

உடுமலையில் இந்துமுன்னணி பிரமுகர் பட்டப்பகலில் பயங்கரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிப்பாளையம் காளியம்மன் வீதியைச் சேர்ந்த சபாபதி என்பவரது மகன் குமரவேல்(வயது 24).இவர் இந்துமுன்னணி உடுமலை வடக்கு நகர செயலாளராக கடந்த 4 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வந்துள்ளார். இவருடைய நண்பரான ஏரிப்பாளையம் விஜய்நகரைச் சேர்ந்த அஸ்வின் என்பவர் மனைவி வளர்மதி(வயது 20) மூலம் அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் மனைவி கவிதா(வயது 30) என்பவர் சுய உதவிக் குழுவில் பணம் பெற்றுள்ளார்.

ஆனால் அந்த பணத்தை கட்டாமல் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் உடுமலை போலீசில் புகார் அளித்துள்ளனர்.இதனையடுத்து 3 தவணைகளாக பணத்தைத் திருப்பித் தந்து விடுவதாக ரஞ்சித் மற்றும் கவிதா உறுதி அளித்துள்ளனர்.

வாக்குவாதம்

இந்தநிலையில் நேற்று மதியம் ரஞ்சித் குடும்பத்துடன் வீட்டைக் காலி செய்து விட்டு செல்ல முயற்சிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அஸ்வின் தனது நண்பர் குமரவேலை அழைத்துக் கொண்டு ரஞ்சித்தின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டைக் காலி செய்யும் நோக்கத்தோடு வீட்டிலுள்ள பொருட்களை சரக்கு ஆட்டோக்களில் ஏற்றிக் கொண்டிருந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அஸ்வின் மற்றும் குமரவேல் ஒப்புக் கொண்ட படி பணத்தைக் கொடுக்காமல் வீட்டைக் காலி செய்யக்கூடாது என்று தடுத்துள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென்று ரஞ்சித் மற்றும் அவருடன் 4 பேர் சேர்ந்து குமரவேல் மற்றும் அஸ்வினை இரும்புக் கம்பியால் கொடூரமாக தாக்கியதுடன் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

3 தனிப்படைகள்

இதில் பலத்த காயமடைந்த குமரவேல் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அஸ்வின் பலத்த காயங்களுடன் துடித்துக் கொண்டிருந்தார். உடனடியாக ரஞ்சித் மற்றும் உடனிருந்தவர்கள் ஒரு சரக்கு லாரியில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். காயங்களுடன் துடித்த அஸ்வினை அருகிலிருந்தவர்கள் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். சம்பவம் குறித்த தகவலறிந்த போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி சென்றுள்ளனர்.

இதில் ரஞ்சித்துக்கு உதவியாக கொலை சம்பவத்தில் ஈடுபட்ட செந்தில்(31) மற்றும் ஆத்தியப்பன்(43) ஆகிய 2 பேரைக் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ரஞ்சித் மற்றும் 2 பேரைத் தேடி வருகின்றனர்.


Next Story