மேற்கு மாம்பலத்தில் ஆட்டோ டிரைவரை ஓட, ஓட விரட்டி வெட்டிய ரவுடிகள்


மேற்கு மாம்பலத்தில் ஆட்டோ டிரைவரை ஓட, ஓட விரட்டி வெட்டிய ரவுடிகள்
x

மது அருந்த பணம் தர மறுத்ததால் ஆட்டோ டிரைவரை ஓட, ஓட விரட்டி வெட்டிய ரவுடிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

ஆட்டோ டிரைவருக்கு வெட்டு

சென்னை கே.கே.நகர், ராணி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24). இவர், ஆட்டோ ஓட்டி பிழைக்கிறார். நேற்று முன்தினம் கார்த்திக், மேற்கு மாம்பலம், எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள பூங்கா அருகே ஆட்டோ ஓட்டிச்சென்றார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ், கொட்டா கார்த்திக் ஆகியோர் கார்த்திக்கின் ஆட்டோவை மறித்தனர். மது அருந்த பணம் கேட்டு ஆட்டோ டிரைவர் கார்த்திக்கை மிரட்டினார்கள். கார்த்திக் பணம் கொடுக்க மறுத்தார். உடனே அவர்கள் இருவரும் சேர்ந்து, கார்த்திக்கை ஓட, ஓட விரட்டி பட்டா கத்தியால் வெட்டினார்கள். ரத்தம் சொட்ட, சொட்ட கார்த்திக் தப்பி ஓடினார். இதை பார்த்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதனால் கார்த்திக்கை உயிரோடு விட்டு, விட்டு பட்டா கத்தியால் வெட்டிய இருவரும் தப்பி ஓடி விட்டனர்.

2 ரவுடிகள் கைது

பலத்த காயத்துடன் ஆட்டோ டிரைவர் கார்த்திக் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து குமரன் நகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

தப்பி ஓடிய மகேஷ், கொட்டா கார்த்திக் இருவரும் சரித்திர பதிவேடு ரவுடிகள் ஆவார்கள். அவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

1 More update

Next Story