கழிப்பறையில் புகையிலை பொருட்கள் பதுக்கல்


கழிப்பறையில் புகையிலை பொருட்கள் பதுக்கல்
x
தினத்தந்தி 15 Sep 2023 9:30 PM GMT (Updated: 15 Sep 2023 9:30 PM GMT)

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கழிப்பறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் செபாஸ்டியன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் புகைபிடித்த 10 பேருக்கு, தலா ரூ.100 அபராதம் விதித்தனர்.

இதற்கிடையே தேனி, மதுரை பஸ்கள் நிற்கும் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத ஒரு கழிப்பறையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கழிப்பறையை சோதனையிட அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் அந்த கழிப்பறையை யாரோ பூட்டி வைத்து இருந்தனர். இதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் பூட்டை உடைத்து கழிப்றையை திறந்து பார்த்தனர்.

அப்போது கழிப்பறையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மொத்தம் 8 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அந்த கழிப்பறை பயன்படுத்தாமல் கிடந்ததால், புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story