காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை:  ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 13 Nov 2022 6:45 PM GMT (Updated: 13 Nov 2022 6:46 PM GMT)

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தர்மபுரி

பென்னாகரம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான நாட்ராம்பாளையம், அஞ்செட்டி, கேரட்டி, கெம்பாகரை, பிலிகுண்டுலு, ராசிமணல், மொசல் மடுவு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக இருந்தது. தற்போது தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கலுக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் பிலுகுண்டுலுவில் மத்திய நீர்வள துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பாதுகாப்பு உடை அணிந்து குடும்பத்தினருடன் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 15 ஆயிரத்து 200 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 20 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இந்த நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டி நிரம்பியுள்ள நிலையில் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணையையொட்டி அமைந்துள்ள நீர்மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதமும், கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி வீதமும் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story