காந்தி சிலைக்கு அணிவித்து மரியாதை


காந்தி சிலைக்கு அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 2 Oct 2022 7:45 PM GMT (Updated: 2 Oct 2022 7:45 PM GMT)

காந்தி ஜெயந்தியையொட்டி திண்டுக்கல், கொடைக்கானலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல்


காந்தி சிலைக்கு மரியாதை


காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள கதர் அங்காடியில் கதர் கிராம தொழில்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடந்த காந்தியடிகள் பிறந்தநாள் விழா, கதர் சிறப்பு விற்பனை தொடக்க விழாவில் பங்கேற்றார். அங்கு காந்தி உருவப்படத்துக்கு கலெக்டர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதையடுத்து கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி கதர் அங்காடி மூலம் ரூ.42 லட்சத்து 42 ஆயிரம் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டது. அதே போல் நடப்பு ஆண்டில் ரூ.1 கோடியே 35 லட்சம் கதர் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார். விழாவில் மாநகராட்சி மேயர் இளமதி, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குனர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


இதேபோல் பா.ஜ.க. மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் பா.ஜ.க.வினர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் காந்தி சிலைக்கு பா.ஜ.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கொடைக்கானல்


கொடைக்கானல் நகராட்சி சார்பில் காந்தி பிறந்தநாளையொட்டி பிரையண்ட் பூங்கா எதிரே உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், கவுன்சிலர் அப்பாஸ் அலி ஆகியோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பேசினர்.


இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள காந்தி சிலைக்கு நகர தலைவர் செந்தில்குமார், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல்கனி ராஜா ஆகியோர் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். நிகழ்ச்சியில் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Next Story