தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும்-கலெக்டர் அறிவுரை


தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும்-கலெக்டர் அறிவுரை
x

தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்று கலெக்டர் அனிஷ்சேகர் அறிவுறுத்தியுள்ளார்.

மதுரை

தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்று கலெக்டர் அனிஷ்சேகர் அறிவுறுத்தியுள்ளார்.

நோய் தடுப்பு மருந்துகள்

தென்மேற்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலைப் பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் அனிஷ்சேகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

ஆண்டு பயிர்களான வாழையை பொறுத்தவரை, காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும். மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடிவைத்தல் வேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை உடனே அறுவடை செய்தல் வேண்டும்.

பல்லாண்டு பயிர்களான மா, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சையை பொறுத்தவரை, காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் பொருட்டு கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப்பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும். தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் தார்ப்பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும். கனமழை காற்று முடிந்தவுடன், மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர் பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்றி, மரங்களுக்கு தேவையான தொழுஉரம் இட வேண்டும். நோய் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

இதர தோட்டக்கலைப் பயிர்களான மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டை, கொத்தமல்லி, கத்தரி மற்றும் இஞ்சி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். நீர் பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயா வண்ணம் பாதுகாக்க வேண்டும். வயல்களில் தேவையான பயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பசுமைக்குடிலை பொறுத்தவரை, அதன் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கவும். பசுமைக்குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று உட்புகாமல் பாதுகாக்கவும். அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை கவாத்து செய்யவும். பசுமைக்குடிலின் கட்டுமானத்தினுள் கிளிப்புகள் ஏதேனும் இருப்பின் அவற்றை மாற்றவும். நிழல்வலைக்குடிலை பொறுத்தவரை, கிழிந்து போன நிழல்வலைகளை தைத்து சரிசெய்யவும். நிழல்வலைக் குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story