சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ஓட்டல்கள் விரைவில் புதுப்பிக்கப்படும் - அமைச்சர் மதிவேந்தன் தகவல்


சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ஓட்டல்கள் விரைவில் புதுப்பிக்கப்படும் - அமைச்சர் மதிவேந்தன் தகவல்
x

சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ஓட்டல்கள் விரைவில் புதுப்பிக்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முருக்கம்பட்டு பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் தமிழ்நாடு ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் சுற்றுலாத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் இயக்கப்படும் திருப்பதி ஆன்மிக சுற்றுலாவிற்கு வார இறுதி நாட்களில் சுமார் 600 பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்த திருப்பதி ஆன்மிக சுற்றுலாவின்போது திருத்தணி முக்கிய இடமாக அமைந்துள்ளது. இந்த இடத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு ஓட்டலில் வழங்கப்படும் உணவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து தமிழ்நாடு ஓட்டல்களையும் புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு சுற்றுலாத்துறை சம்பந்தமான ஆலோசனைகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, சுற்றுலாத்துறை உதவி முதன்மை மேலாளர் இமயவரம்பன், சுற்றுலாத்துறை சென்னை மண்டல மேலாளர் முரளி, திருத்தணி நகர செயலாளர் வினோத்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story