இந்தியாவா, பாரதமா எப்படி அழைப்பது?-சமூக ஆர்வலர்கள் கருத்து


இந்தியாவா, பாரதமா எப்படி அழைப்பது?-சமூக ஆர்வலர்கள் கருத்து
x

‘சிந்துஸ்தான்' என்றும், ‘இந்துஸ்தான்' என்றும் அழைக்கப்பட்டு வந்த சிந்து நதிக்கரைப்பகுதி, பின்னர் மருவி ‘இந்தியா' ஆனது. புராண, இதிகாசங்களில் அது ‘பரத கண்டம்' என்று அழைக்கப்படுகிறது.

அரியலூர்

ஜி-20 மாநாடு

தற்போது இந்தியா என்ற பெயர் பாரத் என்று மாறுவதற்கான அறிகுறிகள் தெரியத்தொடங்கி இருக்கின்றன. டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி-20 மாநாட்டையொட்டி விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில், இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக 'பாரத குடியரசு தலைவர்' என்று அச்சிடப்பட்டு இருக்கிறது. இதுவே அந்த அறிகுறிகளை உறுதி செய்வதாக அமைந்து இருக்கிறது.

அரசியல் தலைவர்கள் மத்தியில் தற்போது விவாதப்பொருளாகவும் அது மாறி உள்ளது. பெயர் மாற்றம் தேவையா? அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க இருக்கும் இந்த குறுகிய கால இடைவெளியில் மத்திய ஆட்சியாளர்கள் ஏன் இதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள்? என்று குறைகூறுகிறார்கள்.

அதே நேரம் ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் பெயர் மாற்றம் சரியே என்கிறார்கள். அதுபற்றி வக்கீல் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்ப்போம்:-

பாரதியார் பேத்தி பெருமிதம்

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியாரின் தங்கை தங்கம்மாளின் கொள்ளு பேத்தி டாக்டர் இரா.உமாபாரதி:- 'உலக வரைபடத்தை குறிக்கும் போது ஆசிய கண்டத்தில் நம் நாட்டை 'பரத கண்டம்' என்று தான் ஆங்கிலேயர்கள் குறித்திருந்தனர். இந்த 'பரத கண்டத்தில் நம்முடைய தாய் திருநாடு இருப்பதால் நாம்நாட்டின் இயற்பெயரே 'பாரதம்' தான். என்னுடைய பெரிய தாத்தா பாரதியார் அவருடைய பல பாடல்களில் அன்றே கூறி சென்றுள்ளார். குறிப்பாக, 'பாரத தேசமென்று பெயர் சொல்லு வார் - மிடிப் பயங்கொல்லு வார் துயர்ப் பகைவெல்லு வார்' என்று பாடினார். அதேபோல், 'வாழிய செந்தமிழ், வாழ்கநற் றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு' என்றும், 'பாரதப் பூமி பழம்பெரும் பூமி, நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்' உள்பட பல்வேறு பாடல்களை நம் நாட்டை பாரதம் என்று புகழ்ந்து பாடி சென்றுள்ளார். பாரதியாரின் கனவை நனவாக்கும் முயற்சி இப்போதாவது நடந்திருப்பதை நினைத்து எங்கள் குடும்பத்தினர் அனைவரும் பெருமை கொள்கிறோம். இதனை இப்போதாவது நிறைவேற்ற இருப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். இதனை மனதார வரவேற்று பெருமிதம் கொள்கிறேன்'.

அரசியலுக்காக...

அரியலூரை சேர்ந்த வக்கீல் பரமேஸ்வரன்:- பூலோக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் இந்தியா என்றே அழைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக ஆங்கிலேயர்கள் கிழக்கே இந்தியாவை நாடிதான் வணிகத்திற்கு வந்தார்கள். வரலாறுகளும் அப்படித்தான் கூறுகிறது. இந்தியா விடுதலை அடையும் போது கூட பாரதம் என்று கூறி பிரிவினை ஏற்படுத்தவில்லை பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான், இந்தியா என்றுதான் பிரிவினை ஏற்பட்டது. இவ்வாறு பிரிவினை ஏற்பட்ட போது கூட சாதி, மத, சமுதாய சார்பற்ற இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்று தான் பெரும்பாலான தலைவர்களின் கருத்தாக இருந்தது.

தற்போது அரசியலுக்காக இந்தியாவை மதம் சார்ந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பாரதம் என்று மாற்ற முயற்சித்து வருகிறார்கள். பெயர் மாற்றத்தினால் தேசிய கீதத்திலிருந்து கொடிவரை நிறைய மாற்றங்களை செய்ய வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச அளவில் பல கேள்விகளுக்கு நாம் பதில் அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அரசியலுக்காகவும், பல்வேறு பிரச்சினைகளை திசை திருப்புவதற்காகவும் மத்திய அரசு பாரத் என்ற பெயர் மாற்றத்தை கையில் எடுத்துள்ளது. இவை எளிதில் நிறைவேற வாய்ப்பு இல்லை. மீண்டும் ஒரு பிரிவினையை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

ராமாயணம், மகாபாரதம்

தா.பழூரை சேர்ந்த செந்தில்:- நமது இந்திய துணை கண்டம் ஆரம்பகாலம் முதலே பரத கண்டம் என்றே அழைக்கப்பட்டது. இதனை நாம் சிறுவயது பாடங்களில் படித்திருக்கிறோம். இடைக்காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்வதற்கு வந்த ஆங்கிலேயர்கள் இந்தியா என்கிற பெயரை நடைமுறைப்படுத்தினர் என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும் நன்கு தெரியும். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்திலும் இந்தியாவை இந்தியா என்றும், பாரதம் என்றும் அழைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இடைக்காலத்தில் ஆங்கிலேயரால் அழைக்கப்பட்ட இந்தியா என்கிற பெயரை விட ராமாயணம், மகாபாரத காலத்தில் இருந்த பெயரான பாரதம் என்கிற பெயரில் அழைப்பதே மிகச்சிறந்தது. விடுதலை வேட்கை மிகுந்த பாடல்களை இயற்றிய பாரதியார் கூட பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் என்று முழங்கி இருக்கிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story