கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x

எருமப்பட்டி அருகே கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நாமக்கல்

எருமப்பட்டி

கணவன், மனைவி

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள வரகூர் தாட்கோ காலனியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தா (46). இவர்களுக்கு கண்ணதாசன் (26) என்ற மகனும், புனிதா (29) என்ற மகளும் உள்ளனர். புனிதாவிற்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியசாமி இதய ஆபரேஷனும், சாந்தா கர்ப்பப்பை ஆபரேஷனும் செய்திருந்தனர். மேலும் சாந்தாவுக்கு கைமுறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் அடிக்கடி வலியால் பெரியசாமியும், சாந்தாவும் அவதிப்பட்டு வந்தனர்.

இவர்களது மகன் கண்ணதாசன் பெயிண்டு அடிக்கும் தொழிலாளியாக உள்ளார். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான கண்ணதாசன் பெற்றோரின் மருத்துவ செலவுக்கும், குடும்ப செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. மேலும் தினமும் குடித்துவிட்டு வந்து அவர் பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார்.

தற்கொலை

இதனால் பெரியசாமியும், சாந்தாவும் மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத காரணத்தாலும், நோயின் தாக்கத்தாலும் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். நேற்று காலை மகன் இல்லாத நேரத்தில் வீட்டின் விட்டத்தில் ஒயரால் பெரியசாமியும், சாந்தாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன், மனைவி 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story