சங்கராபுரம் அருகேரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு பட்டதாரி மனைவியை தாக்கிய கணவர் கைது


சங்கராபுரம் அருகேரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு பட்டதாரி மனைவியை தாக்கிய கணவர் கைது
x
தினத்தந்தி 14 April 2023 6:45 PM GMT (Updated: 14 April 2023 6:46 PM GMT)

சங்கராபுரம் அருகே ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு பட்டதாரி மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

சங்கராபுரம் அருகே உள்ள புதுபலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ஜெயராமன் (வயது 31). இவருக்கும் என்ஜினீயரிங் பட்டதாரியான லட்சுமி(29) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த சில மாதங்களாக ஜெயராமன் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெயராமன் தனது தாயார் பழனியம்மாளுடன் சேர்ந்து கொண்டு லட்சுமியிடம் தொழில் தொடங்குவதற்காக உனது பெற்றோரிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை வாங்கி வா என கேட்டு தகராறு செய்துள்ளாா். இதற்கு லட்சுமி மறுப்பு தெரிவித்தார். இதில் ஆத்திரமடைந்த ஜெயராமன், லட்சுமியை இருப்பு குழாயால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததோடு, நீ செத்தால் தான் 2-வது திருமணம் செய்து கொள்வேன் என கூறியதாகவும் தெரிகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த லட்சுமி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா, ஏட்டு சங்கீதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, ஜெயராமனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பழனியம்மாளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story