புதுப்பெண் இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை


புதுப்பெண் இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை
x
தினத்தந்தி 17 Jun 2023 10:00 PM GMT (Updated: 19 Jun 2023 7:40 AM GMT)

பட்டுக்கோட்டை அருகே புதுப்பெண் இறந்த துக்கத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே புதுப்பெண் இறந்த துக்கத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

திருமணம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 28). இவர், அச்சகத்தில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சுவிதா(22). இவர்கள் இருவருக்கும் கடந்த மாதம் 25-ந் தேதி திருமணம் நடந்தது.

சதீஷ் வேலைக்கு சென்ற நேரத்தில் கூட, சுவிதா வாட்ஸ் அப்பில், தனது கணவருக்கு காதல் தொடர்பான தகவல்களை அனுப்பி வந்துள்ளார். பதிலுக்கு சதீஷ்சும் மனைவிக்கு தகவல் அனுப்பி வந்துள்ளார்.

வீட்டுக்கு அழைத்துள்ளார்

இருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது 100-க்கும் மேற்பட்ட முறை 'ஐ லவ் யூ' என்ற மெசேஜை மாற்றி, மாற்றி அனுப்பியுள்ளனர். நேற்று முன்தினம் சதீஷ் வேலைக்கு சென்ற சில மணி நேரத்தில், சுவிதா போன் செய்து சதீசை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால் வேலையை விட்டு விட்டு வீட்டிற்கு நினைத்த நேரத்தில் வரமுடியாது என கூறி விட்டு சதீஷ் தொடர்ந்து வேலையை பார்த்துள்ளார்.

மனைவி சாவு

மதியம் சுவிதா, சதீஷிற்கு வாட்ஸ்-அப்பில் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, சுவிதா தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சதீஷிடம் கூறிவிட்டு, வாட்ஸ் அப் இணைப்பை துண்டிக்காமல் பிற்பகல் 3.45 மணிக்கு கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஷ், உடனடியாக தனது வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சுவிதா தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. இதனையடுத்து மனைவியை உடனடியாக மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் தற்கொலை

இதையடுத்து சோகமாக இருந்த சதீஷ் இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அவரது நண்பர்கள் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சதீஷிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினார்.

பின்னர் வீட்டிற்கு சென்று தனது மனைவி இறந்த அதே நேரமான மதியம் 3.45 மணிக்கு சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மகள் சாவில் மர்மம்; பெற்றோர் புகார்

இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவிதா மற்றும் சதீஷ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ.(பொறுப்பு) இலக்கியா நேரடியாக சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக சுவிதாவின் பெற்றோர், போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.


Next Story