'ராமர் முகத்தை முதலில் பார்த்த 150 பேரில் நானும் ஒருவன்' - நடிகர் ரஜினிகாந்த்


ராமர் முகத்தை முதலில் பார்த்த 150 பேரில் நானும் ஒருவன் - நடிகர் ரஜினிகாந்த்
x

ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.

சென்னை,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க நேற்று கோலாகலமாக நடந்தது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.

இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். அந்த வகையில், ரஜினி, அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ராம் சரண், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கத்ரினா கைஃப், கங்கனா ரணாவத் எனத் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நேற்று ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முடிந்து வீடு திரும்புகையில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அவர், 'அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாக அயோத்தி ராமர் கோவிலுக்கு வருவேன்' என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'அயோத்தி ராமர் கோவில் விழாவை நான் ஒரு ஆன்மீக நிகழ்வாகத்தான் பார்க்கிறேன்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும் அனைவரின் பார்வையும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ராமர் முகத்தை திறந்ததும் முதலில் பார்த்த 150 பேரில் நானும் ஒருவன். அதில் எனக்கு மிகவும் சந்தோஷம்' என்று தெரிவித்தார்.


Next Story