நான் நிச்சயம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும், தமிழ் அழகான மொழி- ராகுல் காந்தி


நான் நிச்சயம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும், தமிழ் அழகான மொழி- ராகுல் காந்தி
x
தினத்தந்தி 9 Sep 2022 8:43 AM GMT (Updated: 9 Sep 2022 10:04 AM GMT)

நான் என்ன செய்ய வேண்டும் என்பதை மிகத் தெளிவாக முடிவு செய்துவிட்டேன், என் மனதில் எந்தக் குழப்பமும் இல்லை என ராகுல் காந்தி கூறினார்.

சென்னை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இதையடுத்து தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு சுமார் 700 மீட்டர் தூரம் நடந்து வந்த ராகுல்காந்தி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பா.ஜ.க. மீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

அதன் பிறகு அவர் அங்கிருந்து அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்துக்கு சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேரவனில் தங்கி இரவில் ஓய்வெடுத்தார். 2-வது நாள் பாதயாத்திரையை நேற்று அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து தொடங்கினார்.

நேற்று ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரிக்கு சென்று இரவில் அங்கேயே தங்கினார். 2-வது நாள் பாதயாத்திரையில் ராகுல்காந்தி சுமார் 20 கி.மீ. நடந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 7 மணிக்கு தனது பாதயாத்திரையை கல்லூரியில் இருந்து தொடங்கினார். வில்லுக்குறியில் மலர் பாதை அமைத்து ராகுலுக்கு வரவேற்பு அளிக்கபட்டது.

நாகர்கோவிலில் இருந்து தக்கலை முளகுமூடு பகுதியை நோக்கி 18 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கிறார்.3வது நாள் நடைபயணத்தில் சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்.தொடர்ந்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுடன் கலந்துரையாடினார்.

இன்று பிற்பகல் 1 மணிக்கு கன்னியாகுமரியில் ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருமானவரி, அமலாக்கத்துறை என அனைத்து துறைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து செயல்படுகிறது பாஜக அரசு. இந்த யாத்திரை பா.ஜ.க அரசு இயந்திரத்தை எதிர்க்கும் யாத்திரையாக மாறியுள்ளது

நான் நிச்சயம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும், தமிழ் அழகான மொழி, ஆனால் கற்றுக்கொள்வதற்கு கடினம் என நினைக்கிறேன்.

இந்தியாவின் ஒற்றுமைக்காகவே நடைபயணம் மேற்கொண்டுள்ளேன்.நடைபயணம் குறித்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை வரவேற்கிறேன்.

பா.ஜ.க. கொள்கைகளினால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் பிரிவினைக்கு எதிராக இந்த யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் உறுப்பினர் என்ற முறையில் அதில் பங்கேற்றுள்ளேன்.

வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.முக்கிய தொழில்கள் அனைத்தும் உலகின் 3வது கோடீஸ்வரரின் கட்டுப்பாட்டில் உள்ளன.மக்களின் எதிர்பார்ப்புகளை அறியவே யாத்திரை மேற்கொண்டுள்ளேன்.காங்கிரஸ் தன்னுடைய பாதையில் சரியாக சென்று கொண்டிருக்கிறது .

நான் இந்த யாத்திரைக்கு தலைமையேற்கவில்லை. மற்ற நிர்வாகிகளை போல் நானும் பங்கேற்றுள்ளேன். எனக்கு மட்டுமே நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்.இந்த யாத்திரையில் காங்கிரசார் மட்டுமல்ல பொது மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.காங்கிரஸ் தலைவர் பதவியை மையப்படுத்தி இந்த யாத்திரையை மேற்கொள்ளவில்லை.

நான் (காங்கிரஸ்) தலைவராக வரலாமா வேண்டாமா என்பது தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும் போது தெளிவாகத் தெரியும்;

நான் என்ன செய்ய வேண்டும் என்பதை மிகத் தெளிவாக முடிவு செய்துவிட்டேன், என் மனதில் எந்தக் குழப்பமும் இல்லை என கூறினார்.


Next Story