என்னையும், மகளையும் தவிக்க விட்டு சென்றதால் நர்சை குத்தி கொன்றேன்


என்னையும், மகளையும் தவிக்க விட்டு சென்றதால் நர்சை குத்தி கொன்றேன்
x

என்னையும், மகளையும் தவிக்க விட்டு சென்றதால் நர்சை குத்தி கொன்றேன் என்று கைதான கணவர் பகீர் வாக்குமூலம் அளித்தார்.

கோயம்புத்தூர்


என்னையும், மகளையும் தவிக்க விட்டு சென்றதால் நர்சை குத்தி கொன்றேன் என்று கைதான கணவர் பகீர் வாக்குமூலம் அளித்தார்.

தனியார் நிறுவன ஊழியர்

கோவை ரத்தினபுரி ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நான்சி (32). தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் வினோத் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டார். இதனால் நான்சி, தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி வினோத்குமார் தனது மனைவி நான்சி பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவருக்கும், நான்சிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வினோத்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நான்சியை சரமாரியாக குத்தி கொன்றார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் வினோத்குமார் கூறியதாவது:-

மகளை பார்க்க வரவில்லை

நான் தனியார் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி. எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் எனது மனைவிக்கும், எனக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து எனது பெற்றோர், எனது மகளை வளர்த்து வருகின்றனர். இதனிடையே எனது மனைவிக்கு, அவரது உறவுக்கார வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. மேலும் அவர்கள் 2 பேரும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான் இதுகுறித்து நான்சியிடம் கேட்டேன். அப்போது அவர் தான் விடுதியில் தங்கி உள்ளதாகவும், தனக்கு வேறு யாரிடமும் தொடர்பு இல்லை என்றும் கூறினார். ஆனால் அவர் கடந்த சில மாதங்களாக பெற்ற மகளை கூட பார்க்கவரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நான் நான்சியை பின்தொடர்ந்து சென்றேன். அப்போது அவர் விடுதியில் தங்காமல் வேறு இடத்தில் தங்கி இருந்து பணிக்கு சென்று வந்தது தெரியவந்தது.

குத்திக்கொலை

இதையடுத்து நான்சியை கொலை செய்ய முடிவு செய்தேன். சம்பவத்தன்று நான்சி பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது சட்டைக்குள் கத்தியை மறைத்து வைத்து கொண்டு சென்றேன். மருத்துவமனைக்கு சென்றதும் நான்சியை தொடர்பு கொண்டு தனியாக பேச வரும்படி அழைத்தேன். அப்போது அவர் பிரசவ வார்டு அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லா இடத்திற்கு அழைத்து சென்று பேசினார்.

ஆனால் நான்சி என்னிடம் மிகுந்த அலட்சியத்துடன் பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தினேன். அப்போது நான்சி தடுத்ததால் எனது கையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் விடமால் அவரை குத்தினேன். என்னையும், மகளையும் தவிக்க விட்டு சென்ற ஆத்திரத்தில் நான்சி உடலில் பல இடங்களில் குத்தினேன். பின்னர் அங்கிருந்த தப்ப முயன்ற போது பொதுமக்கள் பிடித்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார். கைது செய்யப்பட்ட வினோத்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story