கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை


கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை
x

கைத்தறி ரகங்களை தடையை மீறி விசைத்தறியில் உற்பத்தி செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

ராணிப்பேட்டை

கைத்தறி ரகங்களை தடையை மீறி விசைத்தறியில் உற்பத்தி செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

அமலாக்க பிரிவு

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நம் நாட்டின் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கவும், கைத்தறி தொழில் நலிவடையாமல் பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும் மத்திய அரசால் 1985-ம் ஆண்டு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் 1998-ம் ஆண்டு முதல் 11 ரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ரக ஒதுக்கீட்டு சட்டத்தை அமல்படுத்தும் வகையில் கைத்தறி துறையில் சென்னையை தலைமையகமாகக் கொண்டு அமலாக்கப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. ஈரோடு, சேலம், திருச்செங்கோடு, திருப்பூர், மற்றும் மதுரை சென்னை தலைமையகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது.

11 வகை ரகங்கள்

கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட குறிப்பிட்ட தொழில்நுட்ப குறிப்பீடுகளுடைய ரகங்களான கரை பாவுபேட்டு டிசைனுடன் கூடிய காட்டன் வேட்டி ரகம், பாவு பேட்டு மற்றும் ஊடை பேட்டு மற்றும் புட்டா மற்றும் பட்டு சேலை ரகம், கரை மற்றும் முந்தியுடன் கூடிய காட்டன் துண்டு ரகம், கரை பாவு பேட்டு டிசைன் மற்றும் முந்தியுடன் கூடிய கிரே அங்கவஸ்திரம், லுங்கி, பெட்சீட், ஜமக்காளம், சட்டை துணிகள், கம்பளி, சால்வை, உல்லன்ட்வீட் மற்றும், சத்தார்க் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 சட்டப்பிரிவு (5)-ன்படி சட்டத்தை மீறிய செயலாகும். இது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் பிரிவு 10 (ஏ) -ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

தீவிர ஆய்வு

கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றதா என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களுக்கு நேரில் சென்று தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆய்வின்போது, கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல் துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் அதிகபட்சமாக 6 மாதகால சிறை தண்டனையோ அல்லது அதிகபட்சமாக விசைத்தறி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ தண்டனையாக வழங்கப்படும்.

தொடர்பு கொள்ளலாம்

கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற சென்னை குறளகம் இரண்டாம் தளத்தில் இயங்கிவரும் கைத்தறி அமலாக்க பிரிவு துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


Next Story