ஆவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஐ.ஐ.டி. மாணவி பிணமாக மீட்பு - போலீசார் விசாரணை


ஆவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஐ.ஐ.டி. மாணவி பிணமாக மீட்பு - போலீசார் விசாரணை
x

ஆவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த ஒடிசா மாணவி பிணமாக மீட்கப்பட்டார்.

சென்னை

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் மோகன் பதான். இவரது மகள் மேகாஸ்ரீ (வயது 30). இவர் டெல்லியில் எம்.டெக்., பி.எச்டி., முனைவர் பட்டப்படிப்பை படித்தவர் ஆவார். இந்த நிலையில், சென்னை அடையாறு ஐ.ஐ.டி.யில் 3 மாத ஆராய்ச்சி படிப்பு பயிற்சிக்காக வந்ததாக தெரிகிறது. அடையாறு கல்லூரி விடுதியில் தங்கி ஆராய்ச்சி படிப்பை படித்துக்கொண்டிருந்த மேகாஸ்ரீ, நேற்று முன்தினம் காலை ஆவடி-இந்துக்கல்லூரி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ரெயில் தண்டவாளத்தில் வேலை செய்து கொண்டிருந்த ரெயில்வே ஊழியர் ஒருவர், இளம்பெண் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில், ஆவடி ரெயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆவடி ரெயில்வே போலீசார், இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இளம்பெண் குறித்து தீவிரமாக விசாரித்ததில், அவரது கழுத்தில் அணிந்திருந்த அடையாள அட்டையை வைத்து அவர் யார்? என்பதை அடையாளம் கண்டனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆவடி ரெயில்வே போலீசார், ஓடும் ரெயிலில் சென்ற போது தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மாணவி மேகா ஸ்ரீ இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று ஆவடி ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story