வீட்டில் சட்டவிரோதமாகவெடி தயாரித்தவர் கைது


சுவாமிமலை அருகே வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரித்தவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 400 வெடிகளை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

ரகசிய தகவல்

சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழி ெரயில்வே கேட் சாலையில் வசிப்பவர் ஜேசுதாஸ் (வயது45). இவர் சுவாமிமலை அருகே உள்ள மணப்படையூர் கிராமத்தில் அரசு உரிமை பெற்ற வெடி கடையை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் எந்தவித அரசு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக தனது வீட்டில் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதாக சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சட்டவிரோதமாக வெடி தயாரிப்பு

அதன்பேரில் ஜேசுதாஸ் வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரித்தது தெரியவந்தது.மேலும் அவரது வீட்டில் அரை கிலோ வெடிமருந்து, கறி பவுடர் 13 கிலோ, சோடியம் நைட்ரேட் 5 கிலோ, வாணவெடிகள் 140, சணல் வெடிகள் 40 உள்பட 400 வெடிகள் மற்றும் வெடி தயாரிக்க பயன்படுத்தும் மூலபொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

கைது

இதை தொடர்ந்து வெடி மருந்து, வெடிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேசுதாசை கைது செய்தனர்.


Next Story