5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி


5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 6 Aug 2023 6:45 PM GMT (Updated: 6 Aug 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம் இன்று தொடங்குகிறது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்தியா முழுவதும் கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகால தடுப்பூசிகள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் விடுதல் இன்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தடுப்பூசி சேவை பணியை மேம்படுத்தும் வகையில், கர்ப்பிணிகள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கணக்கெடுத்து, அதில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசியை செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திட சிறப்பு கவனம் தேவைப்படும் இடங்களை கண்டறிந்து மிஷன் இந்திர தனுஷ் 5.0 என்ற திட்டத்தின்கீழ் அனைத்து பகுதியிலும் முதல் சுற்று தடுப்பூசி முகாம் இன்று (திங்கட்கிழமை)தொடங்கி வருகிற 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்களில் நடைபெற உள்ளது. மேலும் நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலமாகவும் நடைபெற உள்ளது.

பயன்பெற வேண்டும்

இதேபோல் 2-வது சுற்று தடுப்பூசி முகாம் வருகிற11-9-2023 முதல் 20-9-2023 வரையும், 3-வது சுற்று தடுப்பூசி முகாம் வருகிற 9-10-2023 முதல் 14-10-2023 வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கத்தினர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே இந்த முகாமை சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story