குறுவை சாகுபடி பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


குறுவை சாகுபடி பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
x

குறுவை சாகுபடி பாதிப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை,

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. சரியான காலகட்டத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் போதுமான அளவு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கடைமடை வரை தேவையான தண்ணீர் சென்றடையாததால் குறுவை சாகுபடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தண்ணீரின்றி கருகியதால் குறுவை பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்தும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர், செயலாளர், ஆணையர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் டெல்டா மாவட்டத்தில் குறுவை பயிர் சேதம் குறித்தும், குறுவை சாகுபடி பாதிப்புக்காக வழங்க வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும் முக்கிய முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குறுவை பாதிப்பு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் ஆய்வு செய்த அதிகாரிகள் முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்பிக்க உள்ளனர்.


Next Story