வாகனங்களின் வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம்


வாகனங்களின் வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம்
x
தினத்தந்தி 16 Oct 2023 12:30 AM GMT (Updated: 16 Oct 2023 12:30 AM GMT)

மோட்டார் சைக்கிள், கார், ஆம்னி பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களின் வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து வாகனத்தொழில் சார்ந்தோர் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.

தேனி


தமிழ்நாட்டில் அனைத்து வாகனங்களுக்கும் வரிகள் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. அதற்கான சட்ட மசோதா சில தினங்களுக்கு முன்பு சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டது.

இதனால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கும், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கும் வரி உயர்வதுடன், விலையும் உயர்கிறது.

முன்பு மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களுக்கு வாழ்நாள் வரியாக (லைப் டேக்ஸ்) 8 சதவீதம் பெறப்பட்டு வந்தது. தற்போது அது இரண்டு அடுக்கு முறையாக மாற்றப்பட்டு இருக்கிறது.

அதாவது ரூ.1 லட்சம் வரை விற்கப்படும் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு இனி 10 சதவீதம் வரியும், ரூ.1 லட்சத்துக்கு மேல் விற்கப்படும் மோட்டார் சைக்கிளுக்கு 12 சதவீதம் வரியும் வசூலிக்கப்படும்.

அதுபோல் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு இரண்டு அடுக்கு முறையில், அதாவது ரூ.10 லட்சம் வரையிலான ஒரு காருக்கு 10 சதவீதம் வரியும், ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ள கார்களுக்கு 15 சதவீதம் வரியும் பெறப்பட்டு வந்தது.

அது தற்போது நான்கு அடுக்கு முறையாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி ரூ.5 லட்சத்திற்கு கீழ் உள்ள கார்களுக்கு 12 சதவீதம் வரியும், ரூ.5 லட்சத்திற்கு மேல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதம் வரியும், ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையிலான கார்களுக்கு 18 சதவீதம் வரியும், ரூ.20 லட்சத்திற்கு மேல் உள்ள கார்களுக்கு 20 சதவீதம் வரியும் இனி வசூலிக்கப்படும்.

இதுதவிர பசுமை வரி, சாலை பாதுகாப்பு வரி போன்றவைகளும் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆம்னி பஸ்கள், கல்வி நிறுவன வாகனங்கள், சரக்கு வாகனங்கள் போன்றவைகளுக்கும் வரிவிகிதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்த வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து வாகனத்துறையைச் சேர்ந்த சிலர் கூறிய கருத்துகள் வருமாறு:-

வரிச்சலுகை வேண்டும்

கம்பத்தை சேர்ந்த ஆம்னி பஸ் உரிமையாளர் மாரியப்பன் கூறும்போது, 'விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் தான் ஆம்னி பஸ்களை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். மற்ற நாட்களில் பஸ்களில் இருக்கைகள் நிரம்புவது கிடையாது. சீசன் காலங்களை தவிர மற்ற நாட்களில் வருவாய் இழப்பு தான் ஏற்படுகிறது. போக்குவரத்து துறையில் ஆட்கள் பற்றாக்குறை, டயர் உள்ளிட்ட அனைத்து உதிரி பாகங்களும் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு அனைத்து உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்துவிட்டது.

முன்பெல்லாம் புதிய பஸ் ஒன்றை ரூ.35 லட்சத்தில் வாங்கிவிட முடியும். ஆனால் தற்போது புதிய பஸ் ரூ.75 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல் வாகனங்களுக்கு சாலை வரி என்ற ஒன்றுதான் முன்பெல்லாம் இருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணம், மாநில அரசு சாலை வரி என 2 வரிகளை வசூலிக்கின்றன. இதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து தொழில் நலிவடைந்து வருகிறது. மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக 2 ஆண்டுகள் வரி சலுகைகள் வழங்குவது போல், போக்குவரத்து தொழில் ஆரோக்கியமாக நடக்க மத்திய, மாநில அரசுகள் டீசல் மற்றும் வரிகளில் சலுகைகள் வழங்கி தொழிலை காக்க வேண்டும். அத்துடன் கார் போக்குவரத்து பயன்பாட்டை குறைத்து வெளிநாடுகளில் செய்வது போல் பொதுப்போக்குவரத்தை ஊக்குவித்து அடுத்த தலைமுறையினருக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழல் கொண்ட சமுதாயத்தை படைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்றார்.

வேலை நிறுத்தம்

பெரியகுளம் லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் தங்கமணி கூறும்போது, 'லாரி போக்குவரத்து துறை கடந்த 4 மற்றும் 5 ஆண்டுகளாக சுங்கச்சாவடி பிரச்சினை, டீசல் விலை உயர்வு, ஆற்றில் மணல் இல்லாததால் கட்டுமான தொழில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவிக்கிறது. லட்சக்கணக்கில் வங்கிகளில் கடன் பெற்று லாரிகளை வாங்கி தொழில் செய்து வந்தோம். ஆனால் தற்போது தொழில் இல்லாததால் லாரிகள் முடங்கி கிடக்கிறது. சிலர் லாரிகளை விற்றுவிட்டு டிரைவர் வேலைக்கு வந்து உள்ளனர். தொழிலை பாதுகாக்க அரசுக்கு முறையிட்டும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

இதனால் லாரி தொழிலை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நேரத்தில் வாகனங்களின் வரியை உயர்த்துவது நியாயமில்லை. இது எங்களை மேலும் துன்புறுத்துவது போல் உள்ளது. இதனை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். தவறும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கங்களும் இணைந்து லட்சக்கணக்கான லாரிகளுடன் மாநிலம் தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

ஏற்றுக்கொள்ள முடியாது

கோடாங்கிபட்டியை சேர்ந்த கார் டிரைவர் லோகநாதன் கூறும்போது, 'ஏற்கனவே வரி உயர்வு, டீசல் விலை உயர்வால் சுற்றுலா வாகன தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. நான் சொந்தமாக டாக்சி வைத்து ஓட்டி வந்தேன். அதன் மூலம் வாழ்வாதாரம் பெற்று வந்தேன். கடந்த சில ஆண்டுகளாக வரி உயர்வு, டீசல் விலை உயர்வு, காப்பீட்டு தொகை உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டேன்.

சொந்த வாகனங்களை சுற்றுலா வாகனமாக பயன்படுத்துவதால் சுற்றுலா வாகன தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் நலிவடைந்து விட்டதால் டாக்சியை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டேன். உரிமையாளராக இருந்த நான் தற்போது வாடகை வாகன டிரைவராக மாறியுள்ளேன். தற்போது மேலும் வரியை உயர்த்தி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அந்த வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும்' என்றார்.

மறுபரிசீலனை

கம்பத்தை சேர்ந்த சுற்றுலா வாகன உரிமையாளர் பிரேம்நஷீர் கூறும்போது, 'மத்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகம் சுங்கச்சாவடிகள் மூலம் அதிக கட்டணம் வசூலித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு சட்டசபையில் வாகனத்துக்கான வரிகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று காலத்தில் இருந்து வாகனத்துக்கான கடன் தொகை செலுத்த முடியாமல் இருந்து வருகிறோம். வரி உயர்வு என்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையாக இருக்கும். ஆனால் தற்போதைய சூழலில் வரியை உயர்த்தி இருக்க வேண்டாம். இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றார்.


Next Story