மோட்டார் சைக்கிள், கார், ஆம்னி பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களின் வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம்-பல்வேறு தரப்பினர் கருத்து


மோட்டார் சைக்கிள், கார், ஆம்னி பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களின் வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம்-பல்வேறு தரப்பினர் கருத்து
x
தினத்தந்தி 15 Oct 2023 6:30 PM GMT (Updated: 15 Oct 2023 7:12 PM GMT)

தமிழ்நாட்டில் அனைத்து வாகனங்களுக்கும் வரிகள் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. அதற்கான சட்ட மசோதா சில தினங்களுக்கு முன்பு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கும், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கும் வரி உயர்வதுடன், விலையும் உயர்கிறது.

அரியலூர்

வாழ்நாள் வரி...

முன்பு மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களுக்கு வாழ்நாள் வரியாக (லைப் டேக்ஸ்) 8 சதவீதம் பெறப்பட்டு வந்தது. தற்போது அது இரண்டு அடுக்கு முறையாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதாவது ரூ.1 லட்சம் வரை விற்கப்படும் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு இனி 10 சதவீதம் வரியும், ரூ.1 லட்சத்துக்கு மேல் விற்கப்படும் மோட்டார் சைக்கிளுக்கு 12 சதவீதம் வரியும் வசூலிக்கப்படும்.

அதுபோல் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு இரண்டு அடுக்கு முறையில், அதாவது ரூ.10 லட்சம் வரையிலான ஒரு காருக்கு 10 சதவீதம் வரியும், ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ள கார்களுக்கு 15 சதவீதம் வரியும் பெறப்பட்டு வந்தது.

ஆம்னி பஸ்கள், சரக்கு வாகனங்கள்

அது தற்போது நான்கு அடுக்கு முறையாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி ரூ.5 லட்சத்திற்கு கீழ் உள்ள கார்களுக்கு 12 சதவீதம் வரியும், ரூ.5 லட்சத்திற்கு மேல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதம் வரியும், ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையிலான கார்களுக்கு 18 சதவீதம் வரியும், ரூ.20 லட்சத்திற்கு மேல் உள்ள கார்களுக்கு 20 சதவீதம் வரியும் இனி வசூலிக்கப்படும்.

இதுதவிர பசுமை வரி, சாலை பாதுகாப்பு வரி போன்றவைகளும் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆம்னி பஸ்கள், கல்வி நிறுவன வாகனங்கள், சரக்கு வாகனங்கள் போன்றவைகளுக்கும் வரிவிகிதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பல்வேறு தரப்பினர் கூறிய கருத்துகள் வருமாறு:-

வரிச்சலுகை வேண்டும்

அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன்:- போக்குவரத்து துறையில் ஆட்கள் பற்றாக்குறை, டயர் உள்ளிட்ட அனைத்து உதிரி பாகங்களும் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதுவும் குறிப்பாக கொரோனாவிற்கு பிறகு அனைத்து உதிரி பாகங்களின் விலைகளும் உயர்ந்து விட்டன. முன்பு எல்லாம் புதிய பஸ் ஒன்றை ரூ.35 லட்சத்தில் வாங்கிவிட முடியும். ஆனால் தற்போது புதிய பஸ் ரூ.75 லட்சமாக உயர்ந்து உள்ளது. அதேபோல் வாகனங்களுக்கு சாலை வரி என்ற ஒன்றுதான் முன்பெல்லாம் இருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணமும், மாநில அரசு சாலை வரி என 2 வரிகளை வசூலிக்கின்றன. இதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து தொழில் நலிவடைந்து வருகிறது. வேறு வழியில்லாமல் 'புலிவாலை பிடித்த கதையாக' இந்த தொழிலை விடவும் முடியாமல், தொடரவும் முடியாமல் தவித்து வருகிறோம். மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக 2 ஆண்டுகள் வரி சலுகைகள் வழங்குவது போல், போக்குவரத்து தொழில் ஆரோக்கியமாக நடக்க மத்திய, மாநில அரசுகள் டீசல் மற்றும் வரிகளில் சலுகைகள் வழங்கி தொழிலை காக்க வேண்டும். அத்துடன் கார் போக்குவரத்து பயன்பாட்டை குறைத்து வெளிநாடுகள் செய்வது போல் பொதுப்போக்குவரத்தை ஊக்குவித்து அடுத்த தலைமுறையினருக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழல் கொண்ட சமுதாயத்தை படைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல்

அரியலூரை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் செந்தில்:-

வாகன வரி உயர்த்தும் அரசின் முடிவு மக்களுக்கு துன்பம் இழைக்கும் செயல் ஆகும். ஏனெனில், வாகனம் ஓட்டி தங்கள் வாழ்க்கையை நடத்தலாம் என்று நினைக்கும் மக்கள் சிலர் தங்கள் முடிவை கைவிடும்படி இந்த வரி உயர்வு உள்ளது. புதிதாக வாகனம் வாங்கும் பலர் இ.எம்.ஐ. கட்டி தான் வாங்குகிறார்கள். தற்போது வாகன வரி உயர்த்தப்பட்டுள்ளதால் வாகனங்களின் வரி உயர்ந்து கூடுதல் மாதங்கள் இ.எம்.ஐ. கட்டும் சூழல் உள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால் அவதிப்படும் மக்களுக்கு இது மேலும் பெரும் சுமையை தரும் செயலாக உள்ளது.

மறுபரிசீலனை செய்ய வேண்டும்

தா.பழூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தினேஷ்:- மோட்டார் சைக்கிள், கார், ஆம்னி பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு வரி உயர்வை தமிழக அரசு திடீரென அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் கடும் பாதிப்பை சந்தித்து வருகிேறாம். அனைத்து வரி உயர்வுகளும் பொதுமக்கள் தலையிலேயே பாரமாக ஏற்றப்படுகிறது. அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வாகன வரி உயர்வு பொதுமக்களை தான் பாதிக்கும். மேலும் ஆட்டோ, கால் டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தீபாவளி பண்டிகையையொட்டி பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கலாம் என்று நினைத்து இருக்கும் அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் இந்த வரி உயர்வு அறிவிப்பு பெரிய ஏமாற்றத்தை மட்டுமே தந்திருக்கிறது. எனவே வாகன வரி உயர்வு அறிவிப்பை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story