போக்குவரத்து இடையூறு ஏற்படுத்திய லாரிகள் சிறைபிடிப்பு


போக்குவரத்து இடையூறு ஏற்படுத்திய லாரிகள் சிறைபிடிப்பு
x

வி.கைகாட்டியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்திய லாரிகள் சிறைபிடிக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி ரெட்டி பாளையம் கிராமத்தில் அல்ட்ராடெக் சிமெண்டு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சிமெண்டு ஆலைக்கு தினமும் சுண்ணாம்புக்கல் ஏற்றி வரும் லாரிகள் மற்றும் பல்கர் லாரிகள், நிலக்கரி லாரிகள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து குப்பைகளை எடுத்து வரும் லாரிகள் என அனைத்தும் வி.கைகாட்டி புறக்காவல் நிலையம் முதல் முட்டுவாஞ்சேரி சாலையில் உள்ள ஏ.டி.எம். சென்டர் வரை சாலையின் இருபுறமும் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்திவிட்டு நீண்ட நேரமாக டிரைவர்கள் எங்கேயோ சென்று விடுகிறார்கள். இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சில சமயங்களில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி செல்லும் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றனர். இந்தநிலையில் நேற்று இரவு சிமெண்டு சாலை வளாகத்தில் லாரிகளுக்கு தார்பாய் கட்டுவதற்கும் இடம் இல்லாததால் வி.கைகாட்டி-முத்துவாஞ்சேரி போக்குவரத்து அதிகமுள்ள சாலை அருகே லாரிகளை நிறுத்தி தார்பாய் கட்டி உள்ளனர். இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விக்கிரமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story