2019-ம் ஆண்டில் விமானத்தில் பயணித்த இளம்பெண், மத்திய அரசை விமர்சித்த வழக்கு: பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் மனு ஏற்பு


2019-ம் ஆண்டில் விமானத்தில் பயணித்த இளம்பெண், மத்திய அரசை விமர்சித்த வழக்கு: பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் மனு ஏற்பு
x

2019-ம் ஆண்டில் விமானத்தில் பயணித்த இளம்பெண், மத்திய அரசை விமர்சித்த வழக்கில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் மனு ஏற்கப்பட்டது

மதுரை


தூத்துக்குடியைச் சேர்த்த லூயிஸ் சோபியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019-ம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் பயணித்தேன். அந்த விமானத்தில் அப்போதைய தமிழக பா.ஜனதாவின் தலைவரும், தற்போதைய தெலுங்கானாவின் கவர்னருமான தமிழிசை பயணம் செய்தார். விமானத்தில் இருந்து இறங்கும் போது மத்திய அரசை விமர்சித்து நான் கோஷம் எழுப்பினேன். இதையடுத்து கோபமடைந்த தமிழிசை, என்னை மிரட்டும் நோக்கில் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். மேலும் இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். என் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு வந்து நிலுவையில் இருந்தது.

இதற்கிடையே சோபியா மீதான வழக்கில் புகார்தாரரான தமிழிசை, தற்போது கவர்னராக பதவி வகித்து வருவதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தற்போதைய தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், பல்வேறு பயணிகள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் புகார்தாரர் விடுவிக்கப்பட்டு விட்டார். அவருக்குப் பதிலாக என்னை இந்த வழக்கில் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story