குன்றத்தூர் அருகே தனியார் பள்ளி வகுப்பறையில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து மாணவர்கள் மீது விழுந்ததால் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்


குன்றத்தூர் அருகே தனியார் பள்ளி வகுப்பறையில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து மாணவர்கள் மீது விழுந்ததால்  பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
x

குன்றத்தூர் அருகே தனியார் பள்ளி வகுப்பறையில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து மாணவர்கள் மீது விழுந்தது. இதனை கண்டித்து பள்ளி முன்பு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

காஞ்சிபுரம்

மாணவர்கள் காயம்

குன்றத்தூர் அடுத்த கோவூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் உள்ள யூ.கே.ஜி. வகுப்பறையில் மேற்கூரையில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சிகிச்சை அளித்த நிலையில் அவர்களின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்து வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து மற்ற பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை என நேற்று பள்ளிக்கு தங்களது பிள்ளைகளை விட வந்த 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியின் எதிரே சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

மேலும் ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்டவர்கள் பள்ளியின் தாளாளர் வந்து உரிய பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். பின்னர் பள்ளியின் தாளாளர் வந்த நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் அவரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதையடுத்து பள்ளியின் தாளாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.

இதுகுறித்த தகவலின் பேரில் மாங்காடு போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பேச்சுவார்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் வருவாய்த்துறையினர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story