கொட்டும் மழையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்


கொட்டும் மழையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

அரியலூரில் கொட்டும் மழையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.

அரியலூர்

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 31-ந் தேதி அரியலூர் நகரில் பெரிய அரண்மனை தெரு, சின்னக்கடை தெரு, பட்டுநூல்கார தெரு, எத்திராஜ் நகர், அண்ணா நகர், பொன்னுசாமி அரண்மனை தெரு ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து 5-ம் நாளான நேற்று சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதற்காக சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது பலத்த மழை பெய்தது. இதனால் விநாயகர் சிலைகள் கரையாமல் இருப்பதற்காக, சிலைகளுக்கு மேல் பக்தர்கள் குடைபிடித்து வந்தனர். தேரடி அருகே ஊர்வலம் வந்தபோது அங்கிருந்து பஸ் நிலையம் வரை செல்ல வேண்டும் என்று பக்தர்கள் கூறினார்கள்.

ஆற்றில் கரைப்பு

இது பற்றி விசுவ இந்து பரிஷத்தின் மாவட்ட தலைவர் முத்துவேல், போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சிலைகள் அண்ணா சிலை வரை சென்று வர போலீசார் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து தேரடியில் இருந்து மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் பக்தர்கள் நடனமாடியபடி விநாயகர் சிலைகளுடன் கொட்டும் மழையில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் மருதையாற்றில் மொத்தம் 11 சிலைகள் கரைக்கப்பட்டன.

ஊர்வலத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர்.


Next Story