கூடலூர் பகுதியில்புளி விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை:ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வலியுறுத்தல்


கூடலூர் பகுதியில்புளி விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை:ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:45 PM GMT)

கூடலூர் பகுதியில் புளி விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேனி

புளி விளைச்சல்

கூடலூர் பகுதி மானாவாரி நிலங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் புளிய மரங்களை வளர்த்து பராமரித்து வருகின்றனர். இந்த பகுதியில் விளையும் புளி அதிக புளிப்பு சுவையுடன், தசைபிடிப்புகள் அதிகம் உள்ளதால் நீண்ட நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருப்பில் வைத்துக்கொள்வதற்கு ஏற்றதாக இருக்கும். இதனால் வெளியூர் வியாபாரிகள் திங்கட்கிழமைதோறும் கூடலூருக்கு வந்து புளியை மொத்தமாக கொள்முதல் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது இங்கு புளி விளைச்சல் குறைந்துள்ளது. மேலும் விலையும் சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 36 கிலோ ஓடு நீக்கிய புளி ரூ.550 முதல் ரூ.600 வரை கொள்முதல் செய்யப்பட்டது. அதே விலையில்தான் இந்த ஆண்டும் விற்பனை ஆகிறது.

ரேஷன் கடைகளில் விற்பனை

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மரத்தில் இருந்து பழம் பறித்தல், டிராக்டர் வாடகை, வெயிலில் உலர்த்துதல், ஓடு நீக்குதல் உள்ளிட்ட காரணங்களால் செலவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது விளைச்சல் குறைந்ததுடன் விலையும் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பொருட்களுடன் ¼ கிலோ புளியும் வழங்கியது.

ஆனால் இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. எனவே தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து புளியை நேரடியாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story